35 ஆண்டுகளுக்கு பிறகு சக்சஸான காதல்.. 65 வயதில் காதலியை கரம்பிடித்த ரோமியோ... முன்மாதிரியான காதல் ஜோடி

0 14191

இளம்வயதில் கைகூடாமல் போன காதலுக்காக வேறொரு திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த முதியவர், 65வயதில் தன் காதலியையே கரம்பிடித்த நிகழ்வு கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. சாதி, வயது என அனைத்தையும் கடந்து 35 ஆண்டுகளுக்கு பிறகு சக்சஸான காதல் கதை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

மைசூர் நகரிலுள்ள ஹெப்பாலா பகுதியைச் சேர்ந்தவர் 65வயதான சிக்கண்ணா. இவரும், ஜெயம்மா என்பவரும் இளமைக் காலத்தில் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரிலும் காதலுக்கு எதிர்ப்பு எழவே, செய்வதறியாமல் ஜெயம்மா, வீட்டில் பார்த்த வேறொரு நபரை திருமணம் செய்துகொண்டு சென்றுள்ளார். ஆனால், ஜெயம்மாவின் திருமண வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை. குழந்தைகள் இல்லாததால், அவரது கணவர், ஜெயம்மாவை விட்டுபிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

காதலி தன்னை விட்டு பிரிந்த விரக்தியில் பிறந்த ஊரை விட்டுவிட்டு வேறொரு இடத்தில் வசித்து வந்த சிக்கண்ணாவுக்கு, சமீபத்தில் தான் ஜெயம்மா தனியாக வசித்து வந்தது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து, தனது கடைசி காலத்திலாவது காதலியுடன் சேர்ந்து வாழலாம் என எண்ணிய சிக்கண்ணா, திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறி ஜெயம்மாளை அணுகியுள்ளார்.

முதுமை காலத்தில் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கலாம் எனக் கூறி ஜெயம்மாளும் திருமணத்திற்கு சம்மதிக்கவே,மேல்கோட்டை பகுதியில் உள்ள கோவில் எதிரே உள்ள மண்டபத்தில் பாரம்பரிய முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பார்த்ததும் காதல்...பார்க்காமலேயே காதல்...இன்ஸ்டா காதல்...இன்ஸ்டண்ட் காதல் என விதவிதமான காதல் கதைகள் அரங்கேறி வரும் இந்த காலத்தில், காதலிக்காக 35 வருடம் காத்திருந்த இவரது காதல் போற்றுதலுக்குரியதாகவும், முன்மாதிரியாகவும் பார்க்கப்படுகிறது....

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments