மழை வெள்ளப் பாதிப்பு.. மத்தியக் குழு ஆய்வு..!

0 2159
மழை வெள்ளப் பாதிப்பு.. மத்தியக் குழு ஆய்வு..!

தமிழ்நாட்டுக்கு வந்துள்ள மத்தியக் குழுவினர் இரு அணிகளாகப் பிரிந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 

மத்திய உள்துறை அமைச்சக இணைச்செயலர் ராஜீவ் சர்மா தலைமையிலான முதல் அணியினருடன், தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டியும் சேர்ந்து சென்னையில் புளியந்தோப்பு வீரப்ப செட்டித் தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, அழகப்பா சாலை ஆகிய பகுதிகளில் மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தனர். அவர்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியும் உடனிருந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரத்தில் வெள்ளச் சேதம் குறித்த படங்களையும், டிரோன் கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர். ஊருக்குள் வெள்ளம் வராமல் இருக்க அடையாற்றின் கரையில் மணல்மூட்டைகள் அடுக்கி முன்னேற்பாடுகள் செய்ததைக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி எடுத்துரைத்தார். அதன்பின் செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர், மாமல்லபுரம், வடபட்டினம், செய்யூர் ஆகிய ஊர்களில் வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.

 செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆய்வை முடித்துக் கொண்ட மத்தியக் குழுவினர் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியே புதுச்சேரிக்குச் சென்றனர். அங்குத் தலைமைச் செயலகத்தில் புதுச்சேரி மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

 மத்திய நிதித்துறை ஆலோசகர் ஆர்.பி.கவுல் தலைமையிலான மத்தியக் குழுவின் இரண்டாவது அணியினர் கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் வெள்ளச் சேதம் குறித்த படங்களைப் பார்வையிட்டனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெள்ளச் சேதம் குறித்து எடுத்துக் கூறினார். அதன் பின்னர் வடக்குத் தாமரைக்குளத்தில் சேதமடைந்த தடுப்பணையைப் பார்வையிட்டனர். குமாரகோவில், பேயன்குழி, வைக்கலூர், தேரேகால்புதூர், திருப்பதிசாரம் ஆகிய இடங்களில் கால்வாய் உடைப்பு, சாலைகள் சேதம், பயிர்ச் சேதம் ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments