சிறப்பு எஸ்.ஐ. படுகொலை.. ஆடு திருடர்கள் வெறிச்செயல்.. ரூ.1கோடி நிதி அறிவிப்பு..!

0 5033
சிறப்பு எஸ்.ஐ. படுகொலை.. ஆடு திருடர்கள் வெறிச்செயல்.. ரூ.1கோடி நிதி அறிவிப்பு..!

திருச்சியில் ஆடு திருடர்களை விரட்டி பிடிக்கச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் நடுரோட்டில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதனும், மற்றொரு காவலரும் சேர்ந்து சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மர்ம கும்பல் ஒன்று ஆடுகளை திருடும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட பூமிநாதனும், மற்றொரு காவலரும் கும்பலிடம் சென்று விசாரித்த நிலையில், அவர்கள் தப்பிச் செல்ல முயன்றதாக சொல்லப்படுகிறது.

உடனடியாக, திருட்டு கும்பலை பிடிக்க பூமிநாதனும், மற்றொரு காவலரும் தனித்தனி பைக்கில் விரட்டிச் சென்ற நிலையில், அந்த காவலர் வழிதவறி செல்ல, பூமிநாதன் திருட்டு கும்பலை பின் தொடர்ந்து விரட்டிச் சென்றிருக்கிறார். திருச்சி - புதுக்கோட்டை மெயின் ரோட்டில், களமாவூர் ரயில்வே கேட் அருகே பள்ளத்துப்பட்டி பகுதியில் ஒரு பைக்கை மடக்கி பிடித்து அதிலிருந்த 2 பேரை பிடித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, மற்ற இரண்டு பைக்குகளில் இருந்த கும்பல், பிடிபட்ட இருவரையும் விடுவிக்குமாறு கூறி மிரட்டிய நிலையில், அதற்கு பூமிநாதன் மறுத்துவிட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மர்ம கும்பல் மறைந்து வைத்திருந்த ஆயுதங்களை வைத்து, நடு ரோட்டிலேயே சரமாரியாக வெட்டிபடுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவ இடத்தில் மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திக்கேயன், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். இதனிடையே, கொலை கும்பல் பைக்கில் வேகமாக தப்பிச் சென்றதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், மொத்தமாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பூமிநாதன் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து, எஸ்.எஸ்.ஐ.பூமிநாதனின் உடல் சோழமாநகரிலுள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. உறவினர்கள், குடும்பத்தினர் அஞ்சலி செலுத்திய பின்னர், 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பூமிநாதன் உடலுக்கு திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் தலைமையிலான காவல்துறையினர் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய டி.ஐ.ஜி. சரவண சுந்தர், கொலை தொடர்பாக 6 சந்தேகத்தின் பேரில் 6 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments