தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்...

0 8694

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என அறிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக இன்று திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று மிதமான மழைக்கும், தென் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருச்சி, டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதியில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் 23ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை மற்றும் தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட வானிலை மையம், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.

இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்த வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments