ஆறு, ஏரிகளை நிரப்பிய கனமழை... குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை நீர்

0 2707

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக ஏரிகள், குளங்கள் நிரம்பி, வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது.

பாலாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாகப் பெய்த மழையில் ஏரிகள், குளங்கள் அவற்றின் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

பாலாற்றில் 25 ஆயிரம் கன அடி தண்ணீரும் செய்யாற்றில் 10 ஆயிரம் கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டுள்ளதால், இருகரைகளையும் தொட்டு வெள்ளம் பாய்ந்து செல்கிறது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 635 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தென்னேரி முழு கொள்ளளவான 18 அடியை எட்டி உபரிநீர் கலங்கல் வழியாக வெளியேறி வருகிறது.

காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பகுதியிலுள்ள பாலாற்றின் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ள நீர் செல்வதால் வாலாஜாபாத் - இளையனார்வேலூர் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் இளையனார்வேலூர், அவலூர், தம்மனூர், உத்திரமேரூர், திருப்புலிவனம், சாலவாக்கம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்க மக்கள் 10 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை நிலை உருவாகி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வரதராஜபுரம் பகுதி கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து குட்டித் தீவு போல காட்சியளிக்கிறது. இடுப்பளவு தண்ணீரில் சிக்கியவர்களை ரப்பர் படகுகள் மூலம் பேரிடர் மீட்பு வீரர்கள் மீட்டு, நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மற்றொரு மிகப்பெரிய ஏரியான மணிமங்கலம் எரியும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மண்ணிவாக்கம் எரியும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

உபரி நீர் செல்லக்கூடிய கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெளியேற வழியின்றி தாம்பரம் சோமங்கலம் செல்லக்கூடிய பிரதான சாலையில் ஆர்ப்பரித்துச் செல்கிறது. இதனால் அவ்வழியே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments