சாவிக்கேட்ட பரம்பரை... சரமாரியாக தாக்கிய அடாவடி ஆணழகன்... சிசிடிவி காட்சியால் சிக்கினார்!

0 4036

சென்னை அய்யப்பன்தாங்கல் அருகே, இந்திய ஆணழகன் பட்டம் வென்றதாக கூறிக் கொள்ளும் நபர், அடுக்குமாடிக் குடியிருப்பு ஊழியரை சரமாரியாக தாக்கிய காட்சிகள் வெளியாகி உள்ளன. சாவிக்காக சண்டை போட்டு, வம்பில் சிக்கிய சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை அய்யப்பன்தாங்கலில் 2500 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ஜிம் உரிமையாளர் மணிகண்டன். இவர் டோன்னெஸ் பிட்னஸ் என்ற பெயரில் உடற்பயிற்சி நிலையம் நடத்தி வருகின்றார். இந்திய ஆணழகன் பட்டம் வென்றதாக கூறிவரும் இவர், திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு மாடியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றபோது வீட்டுக் கதவை திறக்க இயலாமல் தவித்துள்ளார்.

இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்போருக்கான ஹெல்ப் டெஸ்க்கில் பணியில் இருந்த ராஜ்குமார் என்ற ஊழியரிடம் , போன் மூலம் தொடர்பு கொண்டு உதவிக்கு பணியாளரை அனுப்புமாறு கூறியுள்ளார், 45 நிமிடங்களுக்கு மேல் தாமதமான நிலையில் ஊழியர் ராஜ்குமாருக்கும், மணிகண்டனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கீழே இறங்கி வந்த மணிகண்டன், ஊழியர் ராஜ்குமாரை குத்துச்சண்டை வீரரை போல சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகின்றது

தாக்குதலால் காயம் அடைந்த தான், வலிதாங்காமல் அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியே சென்றபோது மீண்டும் துரத்தி வந்து தன்னை தாக்கியதோடு, இது குறித்து புகார் அளித்தால் கொலை செய்துவிடுவதாக பாடிபில்டர் மணிகண்டன் மிரட்டிச்சென்றதாக ராஜ்குமார் எஸ்.ஆர்.எம்.சி போலீசில் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளார்

பாடிபில்டர் மணிகண்டன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி போலீசாரை வழக்குப் பதிவு செய்ய விடாமல் தடுத்ததோடு, புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டுவதாகவும் ராஜ்குமார் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இது தொடர்பாக மணிகண்டன் தரப்பில் விசாரித்த போது, ஹெல்ப் டெஸ்க் ஊழியர் ராஜ்குமார் தன்னை லோக்கல் பையன் என்று கூறிக் கொண்டு வெளியே வந்துவிடுவாயா ? என்று கேட்டு மிரட்டியதால் ஆத்திரத்தில் தாக்கியதாக மணிகண்டன் ஒப்புக் கொண்டார். தான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று காயத்துக்கு மருந்து போட்டு ஆறுதல் கூறியதோடு, உணவருந்த வைத்து சமாதானப்படுத்தி அனுப்பியதாகக் கூறினார்.

சமாதானமாக சென்றுவிடலாம் என்று பேசி இருவரும் பிரிந்து சென்ற நிலையில், யாருடைய தூண்டுதலின் பேரிலோ ராஜ்குமார் போலீசில் புகார் அளித்துள்ளதாக மணிகண்டன் கூறினார். அதே நேரத்தில் மணிகண்டனின் வழக்கறிஞர் கார்த்திகேயன் கூறும் போது, இந்த வழக்கு விசாரணையில் இருப்பதாகக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments