விஜயதசமி கொண்டாட்டம் கோவில்களில் வித்யாரம்பம், அகரம் எழுதிய குழந்தைகள்
தமிழகம் முழுவதும் இன்று விஜயதசமி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயதசமி நாளில், சரஸ்வதி தேவியை கொண்டாடும் விதமாக, குழந்தைகளின் நாவில் அகரம் எழுதி, குழந்தைகளின் கையால் நெல்மணியிலும் அகரம் எழுதும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
விஜயதசமியன்று தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது, தொடங்குவது ஆகியவற்றுக்கு இந்நாள் உகந்ததாக நம்பப்படுகிறது. குழந்தைகள் தடையின்றி எழுதவும், பேசவும் ஆரம்பமாக இருக்க வேண்டும் என்ற முறையில் இந்நாளில் வித்யாரம்பம் நடக்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் விஜயதசமியை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நோட்டு, பேனா போன்றவற்றை வைத்து சரஸ்வதி அம்மனை வழிப்பட்டனர். மேலும், குழந்தைகளை நெல்லில் ஓம், அ, ஆ, ஆகிய எழுத்துகளை எழுதவைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி ஓம்சக்தி கோவிலில், குழந்தைகளின் நாவில் பச்சரிசியில் எழுத்துக்களை எழுதி பெற்றோர் எழுத்தறிவித்தனர். மேலும், தட்டிலுள்ள அரிசியின் மீது குழந்தைகளின் விரல்ளை பிடித்து எழுத்துக்களை எழுத வைத்து சொல்லிக் கொடுத்தனர்.
இதேபோன்று, கோவை, திருபூர், தூத்துக்குடி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள அம்மன் கோவில்களில் சரஸ்வதி அம்மனை போற்றும் விதமாக வித்யாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
Comments