மின்சாரம் தாக்கி துடிதுடித்த தந்தையை காப்பாற்றச் சென்ற இரு மகன்கள் - மூன்று பேரும் பலியான சோகம்...!
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி 5 பேர் தூக்கி எறியப்பட்ட நிலையில், தந்தை, இரண்டு மகன்கள் என ஒரே குடும்பத்தை மூன்று பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மின்சாரம் தாக்கி துடிதுடித்துக் கொண்டிருந்த தந்தையை காப்பாற்றச் சென்ற 2 மகன்களும் பலியாகினர்.
திண்டுக்கல் சின்னாளபட்டி அருகே செட்டியப்பட்டியை சேர்ந்த திருப்பதி - வசந்தா தம்பதிக்கு 12-ம் வகுப்பு பயிலும் சந்தோஷ்குமார் என்ற மகனும், 10ஆம் வகுப்பு பயிலும் விஜய் கணபதி என்ற மகனும் இருந்தனர். திருப்பதி - வசந்தா தம்பதி கூலி வேலை பார்த்து வரும் நிலையில், இன்று காலை வழக்கம்போல் திருப்பதி தனது மனைவியை வேலையிடத்தில் இறக்கிவிட்டுவிட்டு, வீட்டுக்கு மழையில் நனைந்துக் கொண்டே வந்திருக்கிறார். வீட்டுக்கு வந்துவிட்டு தலையை துவட்டிவிட்டு, துண்டை வீட்டுக்கு முன்பிருந்த இரும்பு கம்பியில் காயப் போட்டிருக்கிறார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக திருப்பதியை மின்சாரம் தாக்கிய நிலையில், வீட்டில் இருந்த மகன்கள் இருவரும் தந்தையை காப்பாற்றும் நோக்கில் அவரை பிடித்துள்ளனர். இதில், அவர்கள் உடலிலும் மின்சாரம் பாய்ந்த நிலையில், அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பக்கத்து வீட்டுக்காரரான முருகனும், அவரது மனைவி சூர்யாவும் கீழே கிடந்த மரக்கட்டையை வைத்து தாக்கி தந்தையையும், மகன்களையும் விடுவிக்க முயன்ற போது, 5 பேரும் மொத்தமாக தூக்கி எறியப்பட்டனர்.
இதனையடுத்து, கிராம மக்கள் சேர்ந்து 5 பேரையும் காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், திருப்பதியும், அவரது 2 மகன்களும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.காப்பாற்றச் சென்ற முருகனும், சூர்யாவும் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் மின்சாரம் தாக்கி பலியான சோகம் தாளாமல் உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதது காண்போரை கலங்கச் செய்தது.
தகவல் அறிந்து போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருப்பதி வீட்டுக்கு மின் இணைப்பு வரும் ஒயர் பி.வி.சி. பைப்புக்குள் கொண்டு செல்லப்பட்டிருந்தது. அந்த பி.வி.சி. பைப் தொங்காமல் இருக்க, பிடிமானமாக வீட்டு மீட்டர் பாக்ஸுக்கும், போஸ்டுக்கும் இடையே Stay wire எனப்படும் இரும்பிலான கம்பி ஒன்று போடப்பட்டிருந்தது.
Comments