பொதுமக்கள் பார்வைக்காக எழும்பூரில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் திறப்பு..!

0 2552

சென்னை, எழும்பூரில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார். வரும் 30ஆம் தேதி வரை எவ்வித கட்டணமுமின்றி அருங்காட்சியகத்தை பார்வையிடலாம்.

சென்னை, எழும்பூரில் உள்ள பாரம்பரியம் மிக்க பழைய காவல் ஆணையரக கட்டடம் 6 கோடியே 47 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக மாற்றி அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

காவல் அருங்காட்சியகம், 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களாக அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், சீருடைகள், வாத்திய இசைக் கருவிகள், காவல் துறையின் சாதனைகள், காவல் துறையால் மீட்டெடுக்கப்பட்ட சிலைகள், கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரம், வெடிகுண்டுகள், குண்டுகளை கண்டெடுக்க உதவும் கருவிகள், மாதிரி சிறைச்சாலை, துப்பாக்கிகள், வாள்கள், தோட்டாக்கள், காவல்துறை பதக்கங்களின் மாதிரிகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் முக்கிய வரலாற்று ஆவணங்கள், காவல்துறை தொடர்பான அக்காலத்தில் இயற்றப்பட்ட அதிமுக்கிய அறிவிப்புகள், ஆங்கிலேயக் காலத்து காவல்துறையினர் பயன்படுத்திய ஆயுதங்கள், தமிழக காவல்துறையின் தொடக்கக் கால சீருடைகள், பெல்ட், மோப்ப நாய்படைகளின் புகைப்படங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்தித்தொகுப்புகள், காவல் ஆணையாளர் அலுவலக அறையில் உள்ள அரிய பழம்பொருட்கள் உள்ளிட்டவை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

வரும் 30ஆம் தேதி வரை எவ்வித கட்டணமுமின்றி அருங்காட்சியகத்தை பார்வையிடலாம். அக்டோபர் 1 முதல், அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு மட்டும் அனுமதி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments