தடம் மாறிய சகோதரி சடலமாக்கிய சகோதரன்..! மாமாவுக்காக ஒரு கொலை..!

0 7130

செய்யாறு அருகே உடன்பிறந்த சகோதரியை கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில் தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர். தடம்மாறிய சகோதரியை சடலமாக்கிய சகோதரன் போலீஸில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே உள்ள அப்துல்லாபுரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், காஞ்சிபுரத்தை சேர்ந்த தனது அக்காள் மகள் ராஜேஸ்வரியை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் கடந்த நிலையில் 4 வயதில் மகன் உள்ளான்.

கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையை சுட்டிக்காட்டி கணவன் சத்தம் போட்டதால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று தனது பேச்சை மீறி நடக்கின்ற மனைவியை கை நீட்டி அடிக்க மனமில்லாத கணவன் வெங்கடேசன், விரக்தியில் தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

ராஜேஸ்வரியின் தம்பியான பிரபாகரன், அக்காள் மற்றும் மாமா இடையேயான பிரச்சனைக்கு சமரசம் செய்வதற்கு வெங்கடேசனின் வீட்டுக்கு வந்துள்ளார். கடந்த 18ந்தேதி இரவு அங்கு தங்கி இருந்த பிரபாகரன் வீட்டிற்கு வெளியே படுத்திருந்த நிலையில், வீட்டிற்குள் படுத்திருந்த ராஜேஸ்வரி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். ராஜேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்காக அனுப்பி வைத்த போலீசார், அவர் எப்படி இறந்தார் ? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணையை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் ராஜேஸ்வரியின் கழுத்தில் நகக்கீறல்கள் காணப்பட்டதாலும் அவர் கழுத்தை நெரித்துக் கொலைசெய்யப்பட்டது உறுதியானதாலும் கொலையாளி யார் ? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்தபோது, ராஜேஸ்வரியின் சகோதரர் பிரபாகரன் இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசில் சரண் அடைந்தார்.

தனது மாமா வெங்கடேசன், அக்கா ராஜேஸ்வரி மீது அளவு கடந்த பிரியம் வைத்திருந்ததாகவும், ஆனால் அக்காவுக்கு அதே ஊரை சேர்ந்த வேறு ஒருவருடன் தவறான தொடர்பு இருப்பதை அறிந்து மிகுந்த மன உளைச்சலுக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தனது மாமா எத்தனையோ முறை புத்தி சொல்லியும் திருந்தாமல் மீண்டும் மீண்டும் காதலனுடன் அக்கா பேசிவந்ததால் மாமா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்ற தகவல் அறிந்து மாமாவின் ஊருக்கு சென்றுள்ளார் பிரபாகரன்.

அந்த ஊருக்குள் பலரும் ராஜேஸ்வரியின் நடத்தை குறித்து கடுமையாக விமர்சித்ததால் அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் தனது அக்காவுக்கு தகுந்த அறிவுரை வழங்கி திருத்தி விடலாம் என்று நம்பியுள்ளார். தடம்மாறிய சகோதரியிடம் சம்பவத்தன்று இரவு சமரசம் பேசியுள்ளார். மாமாவுக்கு துரோகம் செய்ய வேண்டாம், நடத்தையை திருத்திக்கொள் என அறிவுறுத்தியுள்ளார் பிரபாகரன்.

ஆனால் தனது வார்த்தையை உதாசீனப்படுத்தியதால், குடும்ப கவுரவத்தை காப்பாற்ற வேண்டுமே என்ற ஆத்திரத்தில் அவரது தலைமுடியை பிடித்து சுவற்றில் அடித்ததாகவும், சத்தம் போட்ட அவரது கழுத்தை இறுக்கியதில் அவர் மூர்ச்சையானதால், தான் அங்கிருந்து தலைமறைவானதாகவும், கொலைப்பழி தனது மாமா மீது வந்துவிடக்கூடாது என்பதற்காக போலீசில் சரண்டைந்ததாகவும் பிரபாகரன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தடம் மாறிய சகோதரிக்கு புத்திசொல்ல முயன்று தோற்று போனதால், அவசர புத்தியால் ஆத்திரப்பட்டு கொலையாளியாகி கம்பி எண்ணும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் பிரபாகரன் என்கின்றனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments