100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பிரதமரின் கதி சக்தி எனும் புதிய திட்டத்தை அறிவித்தார் மோடி..!

0 21096

ற்பத்தி, வேலைவாய்ப்புகளை பெருக்கவும், உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பிரதமர் கதி சக்தி திட்டம் 100 லட்சம் கோடி ரூபாயில் வரும் நாட்களில் தொடங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சாலைகள், மின்சாரத்தை தொடர்ந்து, கிராமங்கள் அனைத்தும் இணைய இணைப்பு மற்றும் ஆப்டிக்கல் ஃபைபர் நெட்ஒர்க் இணைய வசதிகளை தற்போது பெற்று வருவதாக மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி செங்கோட்டையில் இருந்த படி, பிரதமர் மோடி தமது 8ஆவது சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். இந்த நாள், நாட்டின் விடுதலைக்காக போராடிய மாபெரும் தலைவர்களை நினைவுகூரும் தினம் எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, நாட்டின் எதிர்காலத்திற்கு வழிகாட்டிய நேரு, பட்டேல், அம்பேத்கர் உள்ளிட்ட அனைவருக்கும் தேசம் கடமைப்பட்டுள்ளது என்றார். சுதந்திர தின விழாவில் பங்கேற்ற ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளை வாழ்த்திய பிரதமர், அவர்கள் நமது இதயங்களை வென்றவர்கள் மட்டுமல்ல, எதிர்கால தலைமுறைகளுக்கும் ஊக்கம் அளித்தவர்கள் எனக் குறிப்பிட்டார். ஒலிம்பிக் வீரர்-வீராங்கனைகளை நாடே கைதட்டி பாராட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் இதுவரை 54 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதை மோடி குறிப்பிட்டார். கிராமங்கள் சாலைகள், மின்சாரத்தை தொடர்ந்து, இணைய இணைப்பு மற்றும் ஆப்டிக்கல் ஃபைபர் நெட்ஒர்க் இணைய வசதிகளை பெறுவதாகக் மோடி கூறினார்.

7 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா, 8 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள மொபைல் போன்களை இறக்குமதி செய்ததாகவும், தற்போது 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள மொபைல் போன்களை ஏற்றுமதி செய்வதாகவும் அவர் தெரிவித்தார். அனைவரும் ஒன்றாக இணைந்து, நவீன தொழில்நுட்பங்கள், புதுமைகள் மூலம் உலகத் தரம் வாய்ந்த பொருட்களை தயாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். உற்பத்தி, வேலைவாய்ப்புகளை பெருக்கவும், உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பிரதமர் கதி சக்தி திட்டம் (PM Gati Shakti Plan) 100 லட்சம் கோடி ரூபாயில் வரும் நாட்களில் தொடங்கப்படும் என அறிவித்தார்.

எரிசக்தி சுதந்திரத்தை இந்தியா இன்னும் அடையவில்லை எனக் குறிப்பிட்ட பிரதமர், எரிசக்தி தேவைகளுக்காக ஆண்டுக்கு 12 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது என்றார். இந்தியா எரிசக்தி சுயசார்பை அடைவதற்கான உறுதியேற்க வேண்டும் என வலியுறுத்திய மோடி, பழைய வாகனங்களை கழித்துக் கட்டும் கொள்கை அந்த வகையில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு என்றார். கடந்த 2 வருடங்களில் மட்டும் 4.5கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் வீடுகளுக்கே நேரடியாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

மாற்றங்களையும் பெரிய சீர்திருத்தங்களையும் கொண்டுவர அரசியல் உறுதி வேண்டும் என்று கூறிய பிரதமர், அத்தகைய உறுதிக்கு தற்போது பஞ்சமே இல்லை என்றார். ஆளுமைத் திறனில் இந்தியாவின் புதிய அத்தியாயத்தை உலகமே பார்த்து வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். முழுக்க முழுக்க மகளிருக்கான சைனிக் பள்ளிகளை திறக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் சுதந்திர தின விழா உரையில் பிரதமர் அறிவித்தார்.

கொரோனா காலத்திலும் அதிக அன்னிய முதலீடுகளை இந்தியா பெறுவதாகத் தெரிவித்த அவர், இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்திருப்பதாகக் கூறினார். இந்தியா தீவிரவாதம், எல்லை விரிவாக்க முயற்சி என இரண்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடுவதாகவும், அவற்றை துணிச்சலுடன் எதிர்கொண்டு வருவதாகவும் மோடி குறிப்பிட்டார். சர்ஜிக்கல் தாக்குதல், வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதன் மூலம், புதிய இந்தியா உருவாகியிருப்பதும், கடினமான முடிவுகளை எடுக்க இந்தியா தயங்காது என்பதும் எதிரிகளுக்கு உணர்த்தப்பட்டிருப்பதாக பிரதமர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments