”கதறிய மீரா மிதுன்..” கத்த விட்டு கைது செய்த காவல்துறை..!

0 11103
பட்டியலின மக்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட புகாரில், நடிகை மீரா மிதுன் கைது

பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்துக்களைக் கூறி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் நடிகை மீரா மிதுனை, சென்னை சைபர் கிரைம் போலீசார் கேரளாவில் வைத்து கைது செய்துள்ளனர். தன்னை யாராலும் கைது செய்ய முடியாது என்று சவால் வீடியோ வெளியிட்டிருந்த அதே மீரா மிதுன், கைது செய்ய வந்த போலீசாரைப் பார்த்ததும் கத்திக் கூச்சலிட்டு தற்கொலை மிரட்டல் விடுத்த மற்றொரு வீடியோவும் வெளியாகியுள்ளது.

அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட மீரா மிதுன், அதில் தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்களை இழிவு செய்யும் வகையில் பேசியிருந்தார். இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் வன்னி அரசு அளித்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர்.

கடந்த 11 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சைபர் கிரைம் போலீசாரால் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், மீரா மிதுன் ஆஜராகவில்லை. மேலும் நேரில் ஆஜராகததற்கு விளக்கம் எதையும் அவர் அளிக்கவில்லை. ஆனால் அன்றைய தினமே தன்னை யாராலும் கைது செய்ய முடியாது எனவும், தன்னை கைது செய்வது கனவில் மட்டுமே நடக்கும் என்றும் போலீசாருக்கு சவால் விட்டு வீடியோ வெளியிட்டார் மீரா மிதுன்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை மீரா மிதுனை கேரளாவில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக கைது செய்யச் சென்ற போலீசாரைப் பார்த்ததும், தன்னைக் கைது செய்தால் இங்கேயே கத்தியால் குத்தி தற்கொலை செய்துகொள்வேன் என்றும் கத்திக் கூச்சலிட்டு மற்றுமொரு வீடியோவை வெளியிட்டார் மீரா மிதுன்.

மீரா மிதுனின் நாடகத்தை கண்டுகொள்ளாத போலீசார், பெண் போலீசார் உதவியுடன் அவரைக் கைது செய்தனர். நாளை மதியத்திற்குள் மீரா மிதுனை சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளவும் சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன் பின்னர் நடிகை மீரா மிதுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments