முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சொத்துக் குவிப்பு வழக்கு
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, கோவை, காஞ்சிபுரம், திண்டுக்கல்லில் மொத்தம் 53 இடங்களில் காலை முதலே சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், சென்னையில் எம்எல்ஏ ஹாஸ்டலில் தங்கியுள்ள எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் ஒப்பந்தங்களை, தனது சகோதரர், உறவினர்கள், நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கியதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட தனிநபர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் என 17 பேர் மீதும், அடையாளம் கூறப்படாத அதிகாரிகள் உள்ளிட்ட பிறர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ், லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்னர்.
இதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் 36 இடங்களிலும், சென்னையில் 15 இடங்களிலும், திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா ஒரு இடம் என மொத்தம் 53 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் இறங்கினர். சென்னையிலும், கோவையிலும் உள்ள எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கோவை சுகுணாபுரத்தில் எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடைபெறுவதை அறிந்து, அங்கு திரண்ட வேலுமணி ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
ரெய்டு ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், சென்னை எம்எல்ஏ ஹாஸ்டலுக்கு சென்ற, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அங்கு எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை அறிந்து அங்கு சென்ற அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தன்னை உள்ளே அனுமதிக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அதிமுக நிர்வாகி ஒருவர் எம்எல்ஏ ஹாஸ்டலுக்குள் நுழைந்த நிலையில் அவரை போலீசார் உள்ளே இருந்து அகற்றினர்.
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், பெஞ்சமின் உள்ளிட்டோர் அங்கு வந்தனர். அவர்களையும் அதிமுக மாவட்ட செயலாளர்களையும் போலீசார் உள்ளே அனுமதித்தனர். அதேசமயம் தங்களையும் எம்எல்ஏ விடுதிக்குள் அனுமதிக்கக் கோரி, அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் எம்எல்ஏ ஹாஸ்டல் நுழைவுவாயில் கேட் முன்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னக்காம்பட்டி புதூரில், கோவை மாநகராட்சி முன்னாள் உதவி ஆணையர் மதுராந்தகி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. மதுராந்தகியின் தந்தை சதாசிவம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறவினர் என்று சொல்லப்படுகிறது.
சென்னை பல்லாவரம் அடுத்த திருநீறுமலையில் செயல்பட்டு வரும் கேசிபி தார் பிளாண்ட் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை சுகுணாபுரத்தில், எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, போலீசார் வைத்திருந்த பேரிகார்டை சிலர் தூக்கி வீசியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
அசம்பாவிதங்கை தவிர்க்க எஸ்.பி.வேலுமணி வீட்டுக்கு முன் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அங்கு கூடியிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியபோதும், அவர்கள் கலைந்து செல்லவில்லை.
கோவைப்புதூரிலுள்ள, முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் சகோதரர் அன்பரசன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
எஸ் பி வேலுமணியின் மைத்துனர் சண்முகராஜா இல்லத்தில் காலை 6 மணிக்கு தொடங்கி, சுமார் 7மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனை நிறைவடைந்தது. ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் சான்று வழங்கிவிட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை வடவள்ளி பகுதியில் உள்ள, புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி நிர்வாகி சந்திரசேகர் வீட்டில் நடைபெறும் சோதனையில் வரவு செலவு கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திரசேகருக்கு சொந்தமான கார் மற்றும் தோட்டத்திலும் ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என சோதனையிட்டனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, கேசிபி எஞ்சினியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Comments