35 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்..!

0 3507
35 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்..!

தமிழகத்தில் 28 ஆயிரத்து 508 கோடி ரூபாய் முதலீட்டில் 49 தொழில் திட்டங்கள் மூலம் 83 ஆயிரத்து 482 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொண்டு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டித் திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் தொழில்துறை சார்பில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்கிற விழா நடைபெற்றது.

இதில் 17 ஆயிரத்து 141 கோடி ரூபாய் முதலீட்டில் 55 ஆயிரத்து 54 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் JSW Renew Energy, ZF Wabco, Capita Land, Srivaru Motors, TCS மூன்றாம் கட்டம் உள்ளிட்ட 35 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

நாலாயிரத்து 250 கோடி ரூபாய் முதலீட்டில் 21 ஆயிரத்து 630 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் AG&P Pratham, TCS இரண்டாம் கட்டம் உள்ளிட்ட 9 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

ஏழாயிரத்து 117 கோடி ரூபாய் முதலீட்டில் ஆறாயிரத்து 798 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் விக்ரம் சோலார், இன்டக்கிரேட்டட் சென்னை பிசினஸ் பார்க், இஎஸ்ஆர் அட்வைசர்ஸ் உள்ளிட்ட 5 திட்டங்களின் வணிக உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் ஒற்றைச் சாளர இணையத்தளத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

தற்போதுள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றிப் புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவும் வகையில் வணிகம் புரிதலுக்குத் தேவையான நூற்றுக்கு மேற்பட்ட சேவைகள் இந்த இணையத்தளத்தில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் செயல்படும் 5 புத்தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவதற்கான உத்தரவுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments