தகாத உறவுக்காக கணவரை கொலை செய்த பெண்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி நாடகம்..!

0 10184

நாங்குநேரியில் கணவரை ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்து விட்டு, கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் ஒட்டிய மனைவி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில், டாஸ்மாக் மதுபான கடையில் பார் ஊழியராக பணியாற்றி வந்த முத்துகுமார்-சுமித்ரா தம்பதிக்கு 5 மற்றும் 3 வயதில் இரு மகள்கள் உள்ளனர். மதுப்பழக்கம் உள்ள முத்துக்குமார் நேற்று காலை வீட்டு வாசலில் விழுந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

முகத்தில் லேசான காயம் இருந்ததால் தவறி விழுந்ததில் அடிபட்டு இறந்திருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் அவரது மைத்துனர் ராஜேஷ், முத்துக்குமாரின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் முத்துக்குமாரின் கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதற்கான அடையாளங்கள் இருந்தது தெரியவந்ததால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இரவு வீட்டில் தூங்கியவர் மறுநாள் காலை வீட்டு வாசலிலேயே இறந்து கிடந்ததால், மனைவியிடமிருந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சுமித்ரா முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், விசாரணையை தீவிரப்படுத்திய போலீசாருக்கு, அவர்கள் சந்தேகித்தபடியே, திருமணத்திற்கு முந்தைய காதலன் சுந்தர் என்ற கேரக்டர் கதையில் அறிமுகமாகியுள்ளது.

தலைமறைவான அந்த நபரையும் தேடிப்பிடித்து போலீசார் விசாரித்தபோது, சுமித்ராவின் கள்ளக் காதல் கணவனுக்கு தெரிந்துவிட்டதாகவும், தன்னைக் கொலை செய்யப்போவதாக மதுபோதையில் முத்துக்குமார் உளறியதை சுமித்ரா தெரிவித்ததாகவும் கூறியுள்ளான்.

இதையடுத்து முத்துக்குமாரை தீர்த்துக்கட்ட இருவரும் முடிவு செய்து, நள்ளிரவு தூங்கிக் கண்டிருந்த முத்துக்குமாரின் முகத்தில் சுமித்ரா தலையணையை வைத்து அழுத்த, சுந்தர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். பின்னர் முத்துக்குமார் போதையில் தவறி விழுந்து இறந்ததுபோல காட்ட, வாசல்படியில் உடலைப் போட்டுள்ளனர்.

கொலையை அரங்கேற்றிவிட்டு, வழக்கமான சாவு போல், குடும்பத்தார் பெயரில் கணவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சுமித்ராவும், சுந்தரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments