வேளாண் உள்கட்டமைப்புக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி..!

0 2645

வேளாண் உள் கட்டமைப்பை மேம்படுத்தும் விதத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் முதன் முறையாக பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினர். தென்னை விவசாயத்தை அதிகரிக்கும் விதமாக தென்னை வாரியம் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார்.

கள நிலவரத்தை அறியும் விதமாக, வாரிய தலைவர் விவசாய சமூகத்தை சேர்ந்தவராக இருப்பார் என்று அவர் குறிப்பிட்டார். அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் மண்டிகள் வலிமைப்படுத்தப்படும் என்றும், இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கொரோனா தொற்றின் 2வது அலையில் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்கும் விதமாக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த அவசர நிதியாக 23 ஆயிரத்து 123 கோடி ரூபாய் ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

நாட்டில் 736 மாவட்டங்களில் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என்றும், கொரோனா நிவாரண நிதியில் இருந்து இதற்காக ஐசியு வசதியுடன் 20 ஆயிரம் படுக்கைகள் அமைக்கப்படும் என்றும் மாண்டவியா அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments