கடத்தல் ராணி சகலகலா வாணி திடுக்கிடும் பின்னணி..!

0 7536
கடத்தல் ராணி சகலகலா வாணி திடுக்கிடும் பின்னணி..!

மதுரையில் ஆதரவற்றோர் இல்லம் நடத்திவருவதாக கூறி குழந்தைகளை கடத்தி விற்றுவந்த களவாணிக் கும்பலை மதுரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இயங்கிவந்த இதயம் அறக்கட்டளையின் ஆதரவற்றோர் காப்பகத்தில் இருந்து, காய்ச்சல் என்று கூறி தாய்க்கு தெரியாமல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை ஒன்று, கொரோனாவால் இறந்து போனதாக  நாடகமாடியதால் எழுந்த சர்ச்சையால், ஆதரவற்றோர் இல்லம் என்ற பெயரில் அங்கு நடக்கின்ற இதயமற்ற குழந்தை கடத்தல் வியாபாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த காப்பகத்தில் அண்மையில் இறந்ததாக பதிவு செய்யப்பட்ட இரண்டு பச்சிளம் குழந்தைகளையும் பெற்றோருக்கு தெரியாமல் நகைக்கடை உரிமையாளர் மற்றும் சில்வர் பட்டறை உரிமையாளருக்கு சில லட்சங்களுக்கு விற்றிருப்பதைக் கண்டுபிடிக்கப்பட்டு அந்த இரு குழந்தைகளையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த இதயமற்ற குழந்தைக் கடத்தல் வியாபாரத்திற்கு தலைவனாகச் செயல்பட்ட சிவகுமார் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவனது காதலியும் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரகவும் வலம் வந்த கலைவாணி, குழந்தை விற்பனை புரோக்கர் மதர்ஷா, ராஜா, செல்வி, குழந்தையை விலை கொடுத்து வாங்கிய கண்ணன், பவானி, ஜகுபர் சாதிக், அனீஷ்ராணி உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முகத்தை மூடிக் கொண்டு வருகிறாரே... இவர்தான் இந்த குழந்தைக் கடத்தல் வியாபாரத்திற்கு மூளையாக செயல்பட்ட கலைவாணி என்று  கூறப்படுகின்றது.

சிவகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில் இடையில் வந்து அவருடன் ஒட்டிக் கொண்ட கலைவாணியின் களவாணி செயல்களால் தான் இந்த குழந்தை வியாபாரமே தடங்கலின்றி நடந்ததாக சுட்டிக்காட்டுகின்றனர்.

சிவக்குமாரிடம், கலைவாணியின் தொடர்பு குறித்து கேட்டு அவரது மனைவி பலமுறை சண்டையிட்டதாகவும், தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகின்றது. தனது தொழிலுக்கு கலைவாணி முக்கியம் என்று சொன்ன சிவக்குமார், ஒரு கட்டத்தில் தனது மனைவியை விட்டு பிரிந்து கலைவாணியுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தத் தொடங்கியதாகக் கூறப்படுகின்றது.

இந்த இரு குழந்தைகள் மட்டும் இல்லாமல் இன்னும் பல குழந்தைகள் கடத்தி விற்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதால், விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் மதுரை காவல் ஆணையர் ஒருவருடன் சிவக்குமாரும், கலைவாணியும் படம் எடுத்து அந்த புகைப்படத்தைக் கொண்டே பல இடங்களில் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர்.

மதுரையில் எந்தப் பகுதியில் ஆதரவற்றோர் காணப்பட்டாலும், காவல்துறையினர் நம்பிக்கையுடன் இதயம் அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்ததை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டதோடு, மாவட்ட சமூக நலத் துறையில் உள்ள சில அதிகாரிகளை தனது வலைக்குள் விழவைத்த கலைவாணி, அரசின் அனுமதி பெறாத தங்கள் அறக்கட்டளைக்கு சிறந்த சேவை செய்ததாக பரிந்துரை பெற்று இரண்டு முறை விருது பெற்றுள்ளார்.

ஒருமுறை முன்னாள் முதல் அமைச்சர் கரங்களால் சுதந்திர தினவிழாவில் இந்த விருதை பெற்றுள்ளார் கலைவாணி, மற்றொரு முறை மாவட்ட ஆட்சியரிடமிருந்து சிறந்த சேவைக்காண விருதை பெற்றுள்ளார்.

எந்த அடிப்படையில் இந்த விருதுக்கு இவர்களது அறக்கட்டளையின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது ? இவர்களை பரிந்துரைத்த அந்த அதிகாரி யார் ? அவருக்கும் கலைவாணிக்கும் என்ன தொடர்பு என்று விசாரித்தால் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வரலாம் என்று கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் காவல் உயர் அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் தங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நபர்களின் பின்னணியை ஆராயத் தவறினால், இதுபோன்ற போலியான நபர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள காரணமாக அமைந்துவிடும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments