சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்..!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள அனுமதிகளுடன் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கபட்டுள்ளன. இந்த நான்கு மாவட்டங்களிலும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து நகைக்கடைகள் மற்றும் துணிக்கடைகள் குளிர் சாதன வசதி இல்லாமல் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளருடன் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் உணவு மட்டுமே அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகள் மற்றும் விளையாட்டு கூடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்கிறது. வழிபாட்டு தலங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அர்ச்சனை, திருவிழா மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதேப்போல, காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை விளையாட்டு குழுமங்கள் செயல்படவும், திறந்தவெளியில் பார்வையாளர்கள் இன்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஏடிஎம் மைய சேவைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதியளிக்கப்படுகிறது.
வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் பராமரிப்பு பணிகளில் செயல்படுவோர் இ பதிவில்லாமல் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மின்பணியாளர்கள், பிளம்பர்கள் மற்றும் கணிணி பழுது நீக்கம் செய்யும் பணியாளர்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வீடுகளுக்கு சென்று இ- பதிவு இன்றி பணிபுரிய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும், இதர தொழிற்சாலைகள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி மையங்கள் குளிர்சாதன வசதியின்றி 50 சதவீத நபர்களுடன் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
Comments