சென்னை பைபாஸ் சாலை அதிவேக கார் ஓட்டியால் அழகிய குடும்பமே நிர்கதி..! கணவன் பலி – உயிரை மாய்த்த மனைவி

0 13296
சென்னை பைபாஸ் சாலை அதிவேக கார் ஓட்டியால் அழகிய குடும்பமே நிர்கதி..! கணவன் பலி – உயிரை மாய்த்த மனைவி

சென்னை பைபாஸ் விரைவுச்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் கார் மோதி பலியான நிலையில், கணவர் மறைவை தாங்கிக் கொள்ள இயலாமல் அவரது மனைவி குழந்தைகளுடன் விஷத்தை அருந்திய விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிவேக கார் ஓட்டியால் ஒரு குடும்பமே நிர்க்கதியான சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார், தனியார் நிறுவன ஊழியரான இவர் மனைவி நிதா, 10 வயது மகன், 6 வயது மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

கடந்த மாதம் 15ம் தேதி அம்பத்தூரில் பணியை முடித்து மதுரவாயல் புறவழிச்சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மனோஜ் குமார் பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதியதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தால் மனோஜ்குமாரின் குடும்பமே நிலைகுலைந்தது. உறவினர்கள் ஆறுதல் சொல்லியும் அவரது மனைவி- குழந்தைகளைத் தேற்ற இயலவில்லை. கணவனை இழந்த சோகம் தாங்காமல் மன உளைச்சலில் இருந்த மனைவி நிதா விபரீத முடிவை மேற்கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு தனது இரு குழந்தைகளும் உணவில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் நிதா ரத்த வாந்தி எடுப்பதை கண்ட அவரது மகன் தொலைபேசி மூலம் தனது பெரியப்பாவுக்கு தகவல் தெரிவித்துள்ளான். உடனடியாக அங்கு சென்ற அவர் மூவரையும் மீட்டு தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

அங்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நிதா உயிரிழந்த நிலையில், இரு குழந்தைகளும் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

தகவல் அறிந்து உடலை கைப்பற்றிய போலிசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர். அதில் குடும்பத்தோடு கணவனிடமே சென்று விடலாம் என்ற விபரீத முடிவெடுத்து நிதா விஷம் குடித்தது தெரியவந்தது.

பைபாஸ் சாலையில் கார்களில் அதிவேகமாக செல்வோர் நிதானத்துடன் வாகனத்தை இயக்க தவறினால் அது விபத்தோடு நிற்பதில்லை, அந்த விபரீதம் ஒரு குடும்பம் அழிவதற்கே காரணமாகிவிடும் என்பதை சற்று அழுத்தமாகவே உணர்த்துகின்றது இந்த சம்பவம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments