புளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்..! கபாலியை தொட்டதால் தடை

0 80477
புளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்..! கபாலியை தொட்டதால் தடை

யூடியூப்பில் தமிழ் திரைபடங்களை சரமாரியாக விமர்சித்து வந்த ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் என்ற படத்தில் நடிகர் ரஜினி மற்றும் குறிப்பிட்ட மத அமைப்பை விமர்சித்து இழிவான காட்சிகள் இடம் பெற்றதால் படத்திற்கு தணிக்கை குழுவினர் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

பல கோடிகளில் எடுக்கப்பட்ட எந்த ஒரு படத்தையும் விமர்சனம் என்ற பெயரில் அசால்டாக விளாசி எடுத்து அதன் தயாரிப்பாளரை தெருக் கோடியில் நிறுத்துவது சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனின் பாலிசி..!

படம் எப்படி எடுக்க வேண்டும் என்று தமிழ் திரையுலக பிரம்மாக்களுக்கு விமர்சனத்தில் டியூசன் எடுக்கும் ப்ளூ சட்டை மாறனை நம்பி ஆதம் பாவா என்பவர் ஒன்றரை கோடி முதலீட்டில் ஆண்டி இண்டியன் என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை எடுத்தார்.

படத்தை இயக்கிய ப்ளூ சட்டை மாறனோ இதுவரை தமிழ் திரையுலகினர் சொல்ல மறந்த கதையை துணிச்சலுடன் படமாக்குவதாக கூறி களமிறங்கினார். படப்பிடிப்பு முழுமையடைந்து படமும் தயாரானது படத்தை சென்சாருக்கும் அனுப்பினர்.

ப்ளூ சட்டை மாறனின் கைவண்ணத்தில் தயாரான ஆண்டி இண்டியன் படத்தை அமைதியாக பார்த்த சென்சார் குழுவினர் படத்தில் ஒரு இடத்தில் கூட கட் சொல்லவில்லை...! இதனால் படக்குழுவினர் எப்படியும் தங்கள் படத்திற்கு யூ சர்ட்டிபிகேட் கிடைத்து விடும் என்ற மகிழ்ச்சியில் இருந்ததாக கூறப்படுகின்றது.

படத்தின் கிளைமேக்ஸ் முடிந்த அடுத்த நொடி, மொத்த படத்தையுமே தடை செய்வதாக கூறி டுவிஸ்ட் வைத்த தணிக்கை அதிகாரிகள் எழுந்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது. என்ன செய்வதென்று தெரியாமல் இயக்குனர் ப்ளூ சட்டை மாறனும், தயாரிப்பாளர் ஆதம் பாவாவும் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமாக ஒரு படத்தை தடை செய்ததற்கு என்ன காரணம் ? என்று அதிகாரிகள் சொல்வது வழக்கம் என்று கூறப்படுகின்றது ஆனால் இந்த படத்தை எதற்காக தடை செய்தனர் என்பது தெரிவிக்கப்படாததால் ஆண்டி இண்டியன் குழுவினர் குழம்பி போயுள்ளனர்..!

இது குறித்து தணிக்கை குழுவில் உள்ள சிலரிடம் பேசியபோது ஆண்டி இண்டியன் தடைக்கான சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்தது. 2 மணி நேரம் ஓடும் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் மத நம்பிக்கைகள், மத அமைப்புகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், மத ரீதியான கலவரங்களை உருவாக்ககூடிய அளவுக்கு சில காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்றும் சுட்டிகாட்டினர்.

உடல் நிலையை காரணம் காட்டி, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் ஒதுங்கிக் கொண்ட நிலையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நடிகர் ரஜினியை கேலி செய்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஒரு சினிமா, பொழுது போக்கு அம்சங்களுடன், சமூக நல்லிணக்கத்தையும், சகிப்புதன்மையையும் வலியுறுத்த வேண்டுமே தவிர, தனிமனித தாக்குதல் மற்றும் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்பதால் ஆண்டி இண்டியனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆண்டி இண்டியன் படத்தின் தயாரிப்பாளரோ தடையை மறுபரிசீலனை செய்ய டிரிபியூனல் செல்ல விருப்பதாக தெரிவித்தார்.

ப்ளூ சட்டை மாறன் குழுவினர், ஆண்டி இண்டியனை டிரிபியூனலில் திரையிட்டால் அந்த படத்தை பார்த்து அனுமதி வழங்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் யார் தெரியுமா ? வேறு யாருமல்ல , பாரதீய ஜனதா கட்சியின் மகளிரணி பேச்சாளர் கவுதமி..! தான் அந்த ஆபீசர்..!

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கினால் ஒரு வேளை படத்தை வெளியிடலாம் என்று பார்த்தால் படத்தில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமான காட்சிகள் சர்ச்சைக்குரியவையாகவே இருப்பதால் ஆண்டி இண்டியன் அரைமணி நேர இண்டியனாகி விடுவான் என்பதால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றது ஆண்டி இண்டியன் படக்குழு..!

அதே நேரத்தில் எல்லா படத்திலும் ஏதாவது ஓட்டையை சொல்லி யூடியூப்பில் சேட்டை செய்த சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், ஓட்டையையே ஒரு படமாக எடுத்து வைத்திருப்பதாக கூறி திரையுலக சந்தானங்கள் கலாய்த்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments