சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் இருபதுக்கு மேற்பட்டோர் பலி..!

0 3900

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினர் இருபதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். முப்பதுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். 

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கமுள்ள பகுதிகளில் அவர்களைக் கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய ஆயுதக் காவல் படை ஆகியவற்றின் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தக் காவல் படைகளைச் சேர்ந்த நானூற்றுக்கு மேற்பட்ட வீரர்கள் பிஜப்பூர் - சுக்மா மாவட்டங்களின் எல்லையில் காட்டுப் பகுதியில் நேற்றுத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆயுதங்களுடன் தயாராக இருந்த மாவோயிஸ்டுகளும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இரு பிரிவினருக்கும் இடையே மூன்று மணி நேரத்துக்கு மேல் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் இருபிரிவிலும் உயிரிழப்பு, காயம் எனச் சேதம் அதிகமுள்ளதாகக் கூறப்படுகிறது. மோதல் நிகழ்ந்த பகுதிகளில் இருந்து பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 31 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

சண்டையின்போது உணவு தண்ணீர் அடங்கிய பைகளைப் பாதுகாப்புப் படையினர் விட்டுவிட்டுக் காயமடைந்தோரைத் தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. காட்டுப் பகுதியில் அதிக வெப்பம் நிலவிய நிலையில் தண்ணீர் கிடைக்காதால் காயமடைந்த வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. சண்டைக்குப் பின் வீரர்களிடம் இருந்த இருபதுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளை மாவோயிஸ்ட்கள் பறித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments