நாட்டுப்புற பாடலை சுட்ட சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலெட்சுமி..! பாடகி கண்ணீர் மல்க புகார்

0 67497
நாட்டுப்புற பாடலை சுட்ட சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலெட்சுமி..! பாடகி கண்ணீர் மல்க புகார்

நாட்டுபுறப்பாடகி மதுரமல்லி என்பவரால் இயற்றி பாடப்பட்டு, யூடியூப்பில் 2 கோடி முறைக்கும் அதிகமாக பார்க்கப்பட்ட கிராமியப் பாடலைத் திருடி, கோவில் விழாக்களில் பாடிய சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ், ராஜலெட்சுமி தம்பதி, அந்த பாடலை தங்கள் தோழி இயற்றியதாகக் கூறி பொய்யான பரப்புரையில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

நாட்டுபுற கவிஞர் செல்லதங்கையா என்பவரின் பாடல்வரிகளுக்கு உணர்வு பூர்வமான குரல் மூலம் உயிர் கொடுத்து பாடி பிரபலமான சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி தம்பதி மீது தான் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரமல்லி என்ற புனைப் பெயரில் பாடல்களை இயற்றி பாடிவரும் டாக்டர் கலைச்செல்வியின் மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது என்ற வீடியோ பாடல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலெட்சுமியின் கிராமிய பாடல்களை விஞ்சும் அளவிற்கு யூடியூப்பில் 2 கோடி முறைக்கும் அதிகமாக பார்க்கப்பட்டு ஹிட் அடித்தது.

இந்த நிலையில் அண்மையில் நடந்த கோவில் விழா மேடைக்கச்சேரி ஒன்றில், மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது என்ற பாடலை தனது தங்கை என்று கூட்டத்தினரால் அழைக்கப்படும் கலைவாணி என்பவர் இயற்றி பாடியதாக ராஜலெட்சுமி பேசியது தான் இந்த பிரச்சனைக்கு மூலக்காரணம்..!

அந்தபாடலை இயற்றி பாடியதற்கு ஆதரமாக யூடியூப்பில் இன்றளவும் அந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், ராஜலட்சுமி யாரோ ஒரு பெண்ணை வைத்து அந்த பாடலுக்கு சொந்தம் கொண்டாடுவது கீழ்த்தரமானது என்று கண்டனம் தெரிவித்தார் கிராமியப் பாடகி மதுர மல்லி.

ராஜலட்சுமி தவறான கருத்தை வாபஸ் பெறவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்கிற அளவுக்கு பாடகி மதுர மல்லி கடுமையான மன உளைச்சலுடன் வீடியோ வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சாதாரண நிலையில் இருந்து மக்கள் கொடுத்த ஆதரவால் புகழ் ஏணியின் உச்சிக்கு சென்றிருக்கும் நாட்டுப்புற பாடகர் தம்பதியரான செந்தில் ராஜலெட்சுமி ஆகியோர் பாடலை சுட்டதற்கு மன்னிப்பு கேட்பார்கள், நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காவல்துறையில் புகார் அளித்து விட்டு கண்ணீர் மல்க காத்திருக்கிறார் கிராமிய பாடகி மதுர மல்லி..!

சினிமாவில் கதை திருடர்கள் தொல்லை என்றால் இந்த சம்பவத்தின் மூலம், நாட்டுப்புற பாடல்களில் அரங்கேறும் கவிதை திருட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனிடையே தன் மீதான புகாரை முற்றாக மறுத்துள்ள நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments