பாப்பாவ காணோம்..! பாப்பாவே பிறக்கவில்லை..! குழப்பத்தில் போலீஸ்

0 8333

திருப்பதி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அந்த பெண்ணுக்கு குழந்தையே பிறக்கவில்லை என்று மருத்துவர்கள் எதிர் புகார் அளித்த சம்பவத்தால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர். 

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள மங்கா நெல்லூர் கிராமத்தை சேர்ந்த சசிகலா, திருப்பதி காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.

அதில் கர்ப்பிணியாக இருந்த தான் கடந்த 5 ந்தேதி திருப்பதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றதாகவும், தன்னை பரிசோதித்த மருத்துவர்கள், 16 ஆம் தேதி மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்ததாகவும், அதன்படி மருத்துவமனையில் சென்று சேர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை மாலை முதல் ஞாயிறு அதிகாலை வரை தனக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின் தனக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது என்று கூறும் சசிகலா, அதன்பின் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என்றும் தான் பெற்ற குழந்தையை தன்னிடம் கொடுக்கவில்லை என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் அங்குள்ள டாக்டர்கள், சசிகலாவுக்கு கர்ப்பமே ஏற்படவில்லை என்றும் அவர் கர்ப்பிணியாக நடித்து உறவினர்களை ஏமாற்றியது போல, மருத்துவர்களையும் ஏமாற்றப் பார்ப்பதாக சசிகலா மீது திருப்பதி மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மருத்துவர்கள் அளித்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், சசிகலா மற்றும் அரசு பொது மருத்துவமனை மருத்துவர்களை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

தான் கர்ப்பமாக இருந்ததற்கு ஆதாரமாக சசிகலா வளைகாப்பு தொடர்பான போட்டோ, மகப்பேறு மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட் உள்ளிட்ட மற்ற பரிசோதனைகள் தொடர்பான ஆவணங்களை போலீசாரிடம் அளித்துள்ளார்.

இதனால் குழம்பிபோன போலீசார், சசிகலாவுக்கு பிரசவம் நடைபெற்றதா? இல்லையா ? என்பதை கண்டறிய, வேறு டாக்டர் மூலம் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments