தாமிரபரணியில் வெள்ளம் முக்காணி, புன்னக்காயலை சூழ்ந்துநிற்கும் வெள்ளநீர்

0 6741
தாமிரபரணியில் வெள்ளம் முக்காணி, புன்னக்காயலை சூழ்ந்துநிற்கும் வெள்ளநீர்

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒருவாரக் காலமாகத் தொடர்ந்து மழை பெய்ததால் அணைகள் நிரம்பி வழிகின்றன. பாபநாசம், மணிமுத்தாறு, கடனா, ராமநதி அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் 6 நாட்களாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

 தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் - முக்காணி இடையே உள்ள பழைய பாலம் நீரில் மூழ்கியுள்ளது. ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்வதால், முக்காணியில் ஐம்பதுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. 

திருச்செந்தூர் அருகே தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் முகத்தூவர பகுதியான புன்னக்காயல் கிராமத்தை, 3 நாட்களாக வெள்ளநீர் சூழ்ந்திருக்கிறது. முழங்கால் அளவுக்கு வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்திருப்பதால், இயல்பு வாழ்க்கை முழுமையாக முடங்கியுள்ளது. ஆத்தூர் தாமிரபரணி சின்ன ஆற்றுபாலத்தில் மேல் வெள்ளநீர் செல்கிறது.

 தூத்துக்குடியில் கடந்த 4 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளைச் சுற்றித் தண்ணீர் தேங்கியுள்ளது. மழைநீரை வடியவைக்க கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாமிரபரணி ஆற்றிலும், கால்வாய்களிலும் கரைபுரண்டு வெள்ளம் பாய்வதால் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம், புளியங்குளம், ஏரல் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழைத்தோட்டங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

திருவைகுண்டம் அணைக்கட்டின் தென்கால் பாசனத்தில் மிகப்பெரிய குளமான கடம்பாக்குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால், சுமார் 2500 ஏக்கர் பரப்பில் நெற்பயிர்களும், வாழைகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள மீட்புப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியர் செந்தில் ராஜ், பாதிக்கப்பட்ட மக்கள், 20க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments