வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாறி நாளை மறுநாள் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும்

0 4265
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாறி நாளை மறுநாள் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும்

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதையடுத்து, கனமழை காரணமாக தமிழகத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை, இன்று மேலும் தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவானது. நாளை மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல் புதுச்சேரியில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 740 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. நிவர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதன்கிழமை நண்பகல் வாக்கில் கரையைக் கடக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாகத் தீபகற்பப் பகுதியில் மழை பெய்யும் வாய்ப்புகள் நாளை முதல் அதிகரிக்கும் என்றும், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் செவ்வாய் முதல் வியாழன் வரை பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஒருசில இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தெற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, தமிழகக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் வரும் 25ஆம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை அதி கனமழை பெய்யக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இது தவிரச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

புதனன்று டெல்டா மாவட்டங்கள், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நிவர் புயல் காரணமாகத் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் அதி கனமழை பெய்யக் கூடும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments