தாமதமான அறிவிப்பு.. மறுக்கப்பட்ட MBBS.!

0 4367

அரசுப் பள்ளிகளில் படித்து மருத்துவ கல்லூரிகளில் சேர உள்ள மாணவர்களுக்கான முழு கட்டணத்தையும் தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன்னரே வெளியிட்டிருந்தால் தாங்களும் பயன் பெற்றிருப்போம் என்று, வறுமைக்கு இடையே, போராடி பாதிக்கப்பட்ட, ஏழை மாணவர்கள் சிலர் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில், மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.

இந்த உள் ஒதுக்கீடு மூலம், MBBS மற்றும் பல் மருத்துவ படிப்புகளில், 405 அரசு பள்ளி மாணவ, மாணவிகள், சேர்ந்தனர்.

இவர்களில், ஏழை அரசு பள்ளி மாணவர்கள், கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழல் உருவானது. இதையடுத்து, அவர்களது கல்வி கட்டணத்தை செலுத்த உதவுமாறு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், உள் இட ஒதுக்கீடு மூலம் சேர்ந்த அனைத்து அரசு பள்ளி மாணவர்களின், மருத்துவப் படிப்புகளுக்கான, கல்வி கட்டணத்தை, தமிழ்நாடு அரசே செலுத்தும் என முதலமைச்சர் அறிவித்தார்.

தமிழ்நாடு அரசின் அறிவிப்பை பல்வேறு மாணவர்கள் வரவேற்றாலும், கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே அறிவித்திருந்தால், தாங்கள் உட்பட அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூடுதல் மதிப்பெண் பெற்ற சில ஏழை மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்வி கட்டணத்துக்கு பயந்தே கலந்தாய்வில் இருந்து வெளியேறியதாகவும், தங்களை விட குறைவான மதிப்பெண் பெற்ற, மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொண்டு தங்களுக்கான இடத்தில் சேர்ந்ததாக கூறியுள்ளனர்.

குறைந்தபட்சம் கடன் வாங்கியாவது தனியார் கல்லூரிகள் கேட்கும் கட்டணத்தை கட்டிவிட முடியும் என்ற வலிமை பெற்றவர்கள் மட்டுமே தற்போது கல்லூரிகளில் சேர்ந்துள்ள நிலையில், எந்த வகையிலும் கடன் பெறுவதற்கான வழி கிடையாது என்ற வலுவற்ற, குரலற்ற ஏழைகள் தங்களுக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பு கைநழுவிப் போனதை எண்ணி கண்ணீர் வடிக்கின்றனர்.

கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்யாத ஏழை மாணவர்களுக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments