7.5 சதவீத உள்ஒதுக்கீடு : மருத்துவ கனவை நனவாக்கிய அரசுக்கு ஏழை மாணவ மாணவிகள் உருக்கமுடன் நன்றி

0 3392

மிழகத்தில் 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ள ஏழை மாணவ மாணவிகள் அரசுக்கு உருக்கமுடன் நன்றி தெரிவித்துள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியில் கிட்டப்பா குட்டை பகுதியில் வசித்து வருபவர் கட்டிடத்தொழிலாளி மகிமை தாஸ். ஏழ்மையான நிலையிலும் தனது 3 மகள்களை படிக்க வைப்பதில் வைராக்கியமாக இருந்து வருகிறார். இவரின் இரண்டாவது மகள் ஸ்வேதாவுக்கு, தமிழக அரசின் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. மருத்துவக்கனைவை நனவாக்கிய முதலமைச்சருக்கு மாணவி ஸ்வேதா மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தனர்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த தையல் தொழிலாளி கணேசனின் இரண்டாவது மகள் சகானா பேராவூரணியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 524 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். இவரது குடும்ப சூழல் அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் நீட் பயிற்சிக்காக நிதி உதவி செய்தார் தற்போது தமிழக அரசின் உள்ஒதுக்கீட்டில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் அவருக்கு மருத்துவ படிப்புக்கான இடம் கிடைத்துள்ளதால் குடும்பத்தினர் ஆனந்தமடைந்துள்ளனர்.

அதே போன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள முடுக்கன்துறை கிராமத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவுத் தொழிலாளி ராஜசேகர் என்பவரது மகள் சம்சிகாவுக்கு மருத்துவ படிப்பிற்கான இடம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தச்சூர் அன்பு நகர் பகுதியில் வசிக்கும் சிறு விவசாயியின் மகன் அன்பரசன்,அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் இரண்டாம் இடம் பிடித்தார். விவசாயக் குடும்பத்தில் பிறந்து அரசு பள்ளியில் படித்துக்கொண்டு பெற்றோருக்கு விவசாயப் பணியில் உறுதுணையாக இருந்து நீட் தேர்வில் 720க்கு 646 மதிப்பெண்கள் பெற்று அசத்திய அன்பரசன், தன்னுடைய பணி அரசுக்காகவும் அரசுத் துறைக்காக மட்டுமே இருக்கும் என உறுதிபடக் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே டி.வல்லகுளம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கூலிக்கு ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் அருண்குமாருக்கு, தமிழக அரசு கொண்டுவந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் திருநெல்வேலியில் அரசு மருத்துவகல்லூரியில் சீட் கிடைத்துள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முறையான பயிற்சி, ஆலோசனை, உதவிகள் இதற்கு காரணம் என்று அருண்குமார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments