’ஆரோக்கியத்துக்காக தினமும் கோமியம் குடிக்கிறேன்’ - நடிகர் அக்‌ஷய் குமார் ஓபன் டாக்!

0 7286
பியர் கிரில்ஸ் மற்றும் அக்‌ஷய் குமார்

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், தினமும் ஆரோக்கிய காரணங்களுக்காக கோமியம் குடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். 

டிஸ்கவரி சேனலில் வெளியாகும் மேன் VS வைல்டு மற்றும் இன் டூ த வைல்ட் நிகழ்ச்சிகள் புகழ்பெற்றவை. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்  கிரில்சின் சாகசத்துக்காகவே உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. மேன் vs வைல்டு நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரும் பங்குபெற்றுள்ளனர்.

இந்த நிலையில், மேன் VS வைல்டு  நிகழ்ச்சியில் அக்‌ஷய் குமார் பங்குபெற்ற நிகழ்ச்சியின் டீசர் வெளியானது. அந்த டீசரைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அக்‌ஷய் குமார், ”பியர் கிரில்ஸ் உடன் #IntoTheWild நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பு அதிக சவால்கள் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், பியர் கிரில்ஸ் எனக்கு யானை சாணத்தில் டீ போட்டு கொடுத்தார்” என்று கூறியிருந்தார்.

பியர் கிரில்ஸுடன் நடித்தது குறித்த அனுபவத்தை அக்‌ஷய் குமார் நேற்று இன்ஸ்டாகிராம் லைவ்வில் பகிர்ந்துகொண்டார். அதில் பங்கேற்ற நடிகைகள் ஹூமா குரேசி மற்றும் லாரா தத்தா ஆகியோர் இணைந்து, “யானை சாணத்தில் தண்ணீரில்  டீ குடிக்க எப்படி சம்மதித்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அக்‌ஷய் குமார், “பியர் கிரில்ஸ் சொன்னதும் நான் கவலைப்படவில்லை. ஏனெனில், நான் தினமும் ஆரோக்கிய காரணத்துக்காக  கோமியத்தைக் குடித்து வருகிறேன். அதனால், யானை சாணம் டீ பரவாயில்லை என்று எனக்குத் தோன்றியது” என்று தெரிவித்தார். 

நடிகைகள் ஹூமா குரேசியும் லாரா தத்தாவும் தற்போது அக்‌ஷய் குமாருடன் ’பெல்பாட்டம்’ எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments