கொரோனா அறிகுறியின் 3 நிலைகள்.. வழிகாட்டுதல்கள் வெளியீடு..!
கொரோனா அறிகுறிகள் மற்றும் சுய கண்காணிப்பு குறித்த வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
காய்ச்சல், வறட்டு இருமல், சளி, மூச்சுத் திணறல், உடல் சோர்வு, தலைவலி, நாக்கில் சுவை இழப்பு, மூக்கில் நுகர்வுத் தன்மை இழப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
முதல் நிலையில் எந்த அறிகுறியும் தெரியாது என்றும், 2-ஆம் நிலையில் சாதாரண அறிகுறிகள் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, ரத்தத்தில் பிராண வாயு அளவைத் தெரிவிக்கும் பல்ஸ் ஆக்சிமீட்டர் (Pulse Oximeter) மூலம், பரிசோதித்து பிராண வாயு அளவு 95 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
3-ஆம் நிலையில் அதிக மூச்சு வாங்குதல், அதிக நாடித் துடிப்பு, ஒரு நிமிட சுவாச எண்ணிக்கை 24க்கும் குறைவு, மயக்க நிலை உள்ளிட்ட கடுமையான அறிகுறிகள் இருக்கும் என்றும் உடனடியாக தீவிர கண்காணிப்புப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு மருத்துவப் பெட்டியில் தெர்மா மீட்டர், முகக் கவசம், கையுரை, கிருமிநாசினி, பிராணவாயு அளவிடும் கருவி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உடலின் வெப்ப நிலை 98.4 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்றும் நாடித்துடிப்பு 70-ல் இருந்து 80க்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாசம் சராசரியாக பெரியோருக்கு 16 முதல் 18-ஆகவும் சிறியோருக்கு 20 முதல் 25-ஆகவும் இருக்க வேண்டும் என்றும், இரத்தத்தில் பிராண வாயு அளவு 95 முதல் 100 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மாறாக இருந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments