இந்திய-சீனா 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை
லடாக் எல்லையில் இந்தியா - சீனா ராணுவ வீரர்களுக்கு இடையிலான மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் விதத்தில், இருநாட்டு லெப்டினன்ட் ஜெனரல் அதிகாரிகள் மட்டத்திலான இரண்டாம் கட்ட இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
கிழக்கு லடாக் எல்லை பிரதேசமான சூஷுல் ((Chushul )) பிரிவில் சீனப்பகுதியான மோல்டாவில் ((Moldo)) இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் கால்வான் தாக்குதலுக்கு முன்பாக, கடந்த 6 ஆம் தேதி இரு தரப்புக்கும் இடையே இதே மட்டத்திலான அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்தி, இருதரப்பும் ஒன்றுக்கொன்று நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்தைதையில் இந்தியாவின் சார்பில் 14 ஆவது கோர் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங்கும், சீனா தரப்பில் திபெத் ராணுவ மாவட்ட அதிகாரியும் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
15 ஆம் தேதி நடந்த கால்வான் தாக்குதலுக்குப் பிறகு, பதற்றத்தை குறைப்பதற்காக இரு நாடுகளின் மேஜர் ஜெனரல் அதிகாரிகள் மட்டத்தில் 3 முறை தொலைபேசி வழியிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. கடந்த புதன் அன்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ((Wang Yi)) உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன ராணுவத்தின் தாக்குதலை திட்டமிட்ட ஒன்று என வன்மையாக கண்டித்தார்.
கால்வான் தாக்குதலுக்குப் பிறகு சுமார் 3500 கிலோ மீட்டர் தூரமுள்ள இரு நாட்டு எல்லையில், அசாதாரண சூழல்களில், துப்பாக்கி போன்ற ஆயுதங்களை நமது வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற வகையில் எல்லை ஒப்பந்த விதிகளை மத்திய அரசு மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments