கொரோனா பரவல் முடிவுக்கு வந்தாலும்-பருவ கால மாற்றங்களினால் மீண்டும் பரவும் அபாயம்

0 2974
கொரோனா நோய்த் தொற்று பரவல் முடிவுக்கு வந்தாலும் மீண்டும் தொடரும்

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் முடிவுக்கு வந்த பிறகும், பருவகால மாற்றங்களின்போது அந்த நோய்த்தொற்று அவ்வப்போது பரவலாம் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள மார்ஷல் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வெப்பம் மிகுந்த சூழலிலும், ஈரப்பதம் அதிகம் உள்ள நிலையிலும் கொரோனா வைரசின் பரவும் திறன் குறைவாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று மனிதர்களின் செல்களில் இணைவதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் மூக்குப் பகுதி அமைப்புகளின் மாதிரிகளில் கொரோனா வைரசை செலுத்தி ஆய்வு செய்யப்பட்டதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூன்று வெவ்வேறு வெப்பநிலை, ஈரப்பதம் ஆகிய நிலைகளில் அந்த வைரஸ்கள் 7 நாள்களுக்கு வைத்து கண்காணிக்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், குறைந்த வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் இருந்த வைரஸ்கள் அதிக வீரியத்துடனும், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் அதிகம் மிக்க சூழலில் இருந்த வைரஸ்கள் வீரியம் குறைந்தும் காணப்பட்டன என்று அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

இத்தகைய சூழலில், மனிதர்களின் மூக்கு துவாரங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்கள் வெப்பமான சூழலில் பரவும் திறன் இல்லாமல் இருப்பதற்கும், பருவ நிலை மாறும்போது அதன் திறன் அதிகரித்து மற்றவர்களிடம் பரவும் நிலையும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கொரோனா நோய்த்தொற்று பரவல் அடங்கிய பிறகும், பருவநிலை மாற்றங்களின்போது அவ்வப்போது அந்த நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments