'ஜெ. அன்பழகன் மறைவு துரதிருஷ்டவசமானது!' மருந்து அனுப்பி வைத்த தமிழிசை சௌந்தரராஜன் வேதனை

0 7313

முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ஸ்டாலினுக்கு நெருக்கமான தி.மு.க எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக நேற்று இறந்தார். கடந்த 2011- ம் ஆண்டு கருணாநிதி தன் சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார். முன்னதாக. கருணாநிதி மூன்று முறை சேப்பக்கம் தொகுதியில் இருந்துதான் எம்.எல்.ஏ- வாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். திருவாரூர் தொகுதிக்கு கருணாநிதி மாறிய பிறகு, தன் சேப்பாக்கம் தொகுதியை ஜெ. அன்பழகனுக்கு ஒதுக்கினார். கருணாநிதியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த ஜெ. அன்பழகனின் மறைவு தி.மு.க தொண்டர்களை மிகுந்த மனவேதனைக்குள்ளாக்கியுள்ளது . அது போல, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனையும் மிகுந்த மனவேதனையடைய செய்துள்ளது.

ஜெ. அன்பழகன் கடந்த ஜூன் 2- ந் தேதி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலையில் அவ்வப்போது பின்னடைவும் முன்னேற்றமும் காணப்பட்டது. ஆனால், இறப்பதற்கு ஒருநாள் முன்னதாக அவரின் உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து, ஹைதரபாத்தில் தயாரிக்கப்படும் remdesivir 100mg என்ற மருந்தை கொடுத்தால், அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கருதினர்.

இதையடுத்து, ரேலா மருத்துவமனை நிர்வாகம், தெலங்கானா ஆளுநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு ரெம்டெசிவர் மருந்தை அனுப்பி வைக்க முடியுமா என்று கேட்டது. தொடர்ந்து, தமிழிசையின் உத்தரவைடுத்து உடனடியாக ஹைதரபாத்திலிருந்து விமானத்தில் ரெம்டெசிவர் மருந்தை அனுப்பி வைக்கப்பட்டது.  எனினும், அன்பழகன் உயிரை காப்பற்ற முடியவில்லை.

இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜனிடத்தில் பேசிய போது, '' அன்றைக்கு காலையில் 6 மணிக்கு எனக்கு போன் வந்தது. உடனடியாக தேவையான நடவடிக்கை எடுத்து மருந்தை அனுப்பி வைத்தேன். ஆனாலும், அவர் இறந்து போனது மிகுந்த மனவேதனை தருகிறது. அன்பழகனை பல முறை சந்தித்திருக்கிறேன். மாற்று கட்சியினரிடத்திலும் அன்புடன் பழகுபவர். அரசியல் எல்லைகள் எல்லாவற்றையும் தாண்டி ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு உதவியாக இருக்க வேண்டிய காலக்கட்டம் இது. அன்பழகனுக்கு மட்டுமல்ல தமிழகத்திலிருந்து யார் என்ன உதவி கேட்டாலும் நான் செய்ய தயராக இருக்கிறேன்.

தெலங்கானாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த 300 மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரேனா தெற்று ஏற்பட்டுள்ளது. இந்த 300 மருத்துவப் பணியாளர்களால் 9, 000 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும். இவர்கள், அனைவரும் ஹைதரபாத் நிஜாம் மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த மருத்துவர்களை மனதளவில் ஊக்கப்படுத்தும் வகையில் நான் சென்று சந்தித்தேன்.

விரைவில் மருத்துவர்கள் அனைவரும் குணம் அடைந்து பணிக்குத் திரும்புவார்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டு மக்களே தயவு செய்து மருத்துவர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள். அடிக்கடி கை கழுவுங்கள், நல்ல சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். இதுதான், என் தமிழ் மக்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் '' என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments