ஹாலிவுட்டிலும் ஜொலித்த இர்பான்... இயல்பாக நடித்து, இதயங்களை வென்றவர்

0 4632
இந்தியில் மட்டுமின்றி, ஹாலிவுட் படங்களிலும் ஜொலித்த, நடிகர் இர்பான் கான், அரியவகை புற்றுநோய் பாதிப்பால், தனது 53 வயதில் காலமானார். அவரது மறைவுக்கு, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், புகழாஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்தியில் மட்டுமின்றி, ஹாலிவுட் படங்களிலும் ஜொலித்த, நடிகர் இர்பான் கான், அரியவகை புற்றுநோய் பாதிப்பால், தனது 53 வயதில் காலமானார். அவரது மறைவுக்கு, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், புகழாஞ்சலி செலுத்தியுள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த இர்பான், தனது இளம் வயதில் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.

23 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அணியில் தேர்வானாலும், பயிற்சி பெற போதிய பணமின்றி, கனத்த மனதுடன் அதற்கு விடை கொடுத்துவிட்டு, டெல்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் இணைந்து பயின்றார்.

மும்பைக்கு வந்த இர்பான், 1985ல் தூர்தர்ஷனில் வெளியான "ஸ்ரீகாந்த்", அதைத் தொடர்ந்து, "சாணக்கியா", "சந்திரகாந்தா" உள்ளிட்ட பிரபல சின்னத்திரை தொடர்களில் நடித்தார்.

நடிகர் இர்பான் வெள்ளித்திரையில் தோன்றிய முதல் படம், சலாம் பாம்பே (Salaam Bombay!).... அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தபோதும், நாடகங்களின் மீதான காதலால், சின்னத்திரையில் நடிப்பதை ஒருபோதும் அவர் கைவிடவில்லை.

வில்லன், குணச்சித்திர வேடம் என அனைத்திலும், முன்னணி நடிகராக உயர்ந்த இர்பான் கான், இந்தி மொழியைத் தாண்டி, 2001ல் பிரிட்டிஷ் தயாரிப்பான The Warrior என்ற ஆங்கில திரைப்படத்தில் முதன்முதலில் நடித்தார்.

"தி நேம்ஷேக்" (The Namesake), "ஸ்லம்டாக் மில்லினியர்"(Slumdog Millionaire), "லைஃப் ஆஃப் பை"(Life of Pi), "ஜுராசிக் வேர்ல்டு"(Jurassic World) போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். விளம்பர மாடலாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், வளைய வந்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு, நியூரோ எண்டோகிரைன் டியூமர் (Neuroendocrine tumor) என்ற அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதிலிருந்து இர்ஃபான் கானின் உடல்நிலை நலிந்தது. லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக இர்ஃபானால் தனது கடைசி படமான, "ஆங்ரேஸி மீடியத்தை"(Angrezi Medium) கூட ப்ரொமோட் செய்ய முடியவில்லை.

30 ஆண்டுகள் சினிமா வாழ்க்கையில், ஒரு தேசிய விருதையும், நான்கு பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். அவரது கலைச்சேவையைப் பாராட்டி 2011-ஆம் ஆண்டில், பத்மஸ்ரீ விருதளித்து, மத்திய அரசு கெளரவித்தது. இர்ஃபானுக்கு, சுதாபா சிக்தர் (Sutapa Sikdar) என்ற மனைவியும், பாபில் மற்றும் அயன் ஆகிய பிள்ளைகளும் உள்ளனர்.

சினிமாவிலும், தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, பல்வேறு மொழி ரசிகர்களையும் கொள்ளை கொண்ட இர்பான், மீளா துயிலில் ஆழ்ந்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகளால், ஆள் அரவமின்றி, அவரது உடல், மிகவும் அமைதியான சூழலில் கிடத்தப்பட்டிருந்த காட்சிகள், நெகிழவைப்பதாக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY