நிர்பயா வழக்கு - கடந்துவந்த பாதை..!

0 4045

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் நான்கு பேருக்கும் அதிகாலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

டெல்லியில் 2012ம் ஆண்டு தனது ஆண் நண்பருடன் வெளியே சென்ற இளம்பெண்ணை, 6 பேர் கொண்ட கும்பல் ஓடும் பேருந்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, இரும்புக் கம்பியால் தாக்கி பேருந்திலிருந்து வீசியெறிந்துவிட்டு சென்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய சிறுவன் ஒருவன் 3 ஆண்டுகள் சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டான். மீதமுள்ள 5 பேரில் ராம்சிங் என்பவன் சிறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள, மற்ற நால்வருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. 

இந்நிலையில் பல்வேறு தடைகளையும் தாண்டி இன்று காலையில் குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக குற்றவாளிகள் முகேஷ் சிங், அக்சய் குமார், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோரது உடல் நலனை சோதித்து மருத்துவர்கள் சான்றளித்தனர். இதையடுத்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஹேங்மேன் பவன் ஜலாட் காலை 5.30 மணிக்கு, 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றினார்.

விதிகளின் படி அரை மணி நேரம் கழித்து உடல்கள் இறக்கப்பட்டு, நால்வரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

குற்றச்செயல் நடைபெற்று 7 ஆண்டுகள் கடந்த நிலையில், தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தியறிந்து சிறை வாசலில் திரண்டிருந்த பொதுமக்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திகார் சிறை வளாகத்தில் கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் பேசிய நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி தமது மகளுக்கு நீதி கிடைத்துவிட்டதாக கூறினார்.

இந்நிலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதே மிக முக்கியம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், பெண்கள் மேம்பாட்டை நோக்கிய, சமவாய்ப்பை வழங்கும் தேசத்தை நாம் அனைவரும் இணைந்து கட்டமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments