கொரானா பரவாமல் தடுக்க அதிரடி நடவடிக்கை..!

0 3739

கொரானா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கான விசாக்கள் ஏப்ரல் 15 வரை மத்திய அரசால் தற்காலிகமாக ரத்து (suspend) செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நாளை முதல் அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60ஐ தாண்டிவிட்ட நிலையில், அதை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், தூதரக ரீதியிலான விசா (diplomatic visa) ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்பு அதிகாரிகளுக்கான விசா, வேலைவாய்ப்பு விசா தவிர்த்து அனைத்து விசாக்களும் ஏப்ரல் 15ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விசா இல்லாமல் இந்தியாவில் பயணிக்க வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வசதியும் ஏப்ரல் 15ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும், இந்த முடிவு நாளை மாலை 5.30 மணி முதல் (march 13... 12 00 GMT) அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டிய கட்டாய நிலையில் இருக்கும் வெளிநாட்டினர் தத்தமது நாட்டிலுள்ள இந்திய தூதரகங்களை அணுகலாம் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சீனா, இத்தாலி, ஈரான், கொரிய குடியரசு, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளில் பிப்ரவரி 15ம் தேதிக்கு பிறகு சுற்றுப்பயணம் செய்த நிலையில், இந்தியா வரும் இந்தியர்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகளும் கட்டாயம் குறைந்தபட்சம் 14 நாள்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியர்கள் அனைவரும் மிகவும் அத்தியாவசியமில்லாத வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தபடுவதாகவும், அவ்வாறு வெளிநாடு சென்றுவிட்டு திரும்பும் இந்தியர்களும் கட்டாயம் 14 நாள்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இத்தாலியில் கல்வி காரணங்களுக்காக சென்றோர், அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் மூலம் கொரானா உள்ளதா என பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்றும், அதில் கொரானா இல்லை என்பது உறுதியாகும்பட்சத்தில், விருப்பப்பட்டால் இந்தியா வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வருவோருக்கு கொரானா இல்லையென்றாலும் 14 நாள்களுக்கு கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியிலிருந்து இத்தாலியின் ரோம், மிலன் நகரங்களுக்கும், டெல்லியிலிருந்து தென்கொரியாவின் சியோல் நகரத்துக்கும் இடையேயான விமான இயக்கம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் இந்தியா வருவோர் விமான நிலையங்களில் தீவிர பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனர். இதற்கு அதிக நேரம் பிடிப்பதால், நீண்ட வரிசையில் பயணிகள் காத்து கிடக்கும் நிலை காணப்படுவதாக பயணிகள் சிலர் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். சில பயணிகள் தங்களை சோதனைக்கு உட்படுத்தாமல் நழுவிச் சென்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் புரி, சென்னை, டெல்லியில் இருந்து வெறும் 2 புகார் மட்டுமே வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments