சென்னை மடிப்பாக்கத்தில் திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் 30 லட்சம் ரூபாய் கொடுத்து கொலைகார கூலிப்படையை ஏவிய இரு பெண்களை பிடித்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
சென்னை மடிப்பாக்கம் திமுக வட்டச் செயலாளரான செல்வம் கடந்த 1ந்தேதி 8 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி கூலிப்படையைச் சேர்ந்த 5 பேர் விக்கிரவாண்டியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
மீதமுள்ள நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தநிலையில் கூலிப்படையை சேர்ந்த அருண் என்ற மற்றொரு கூட்டாளியும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கூலிப்படை தலைவனான முருகேசனைப் பிடித்தால் தான் இந்த கொலைக்கான பின்னணி முழுமையாக தெரியும் என போலீசார் கூறிவந்தனர்.
இந்த நிலையில் கூலிப்படை தலைவன் முருகேசனுக்கு பெண் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு அசைன்மென்ட் கொடுத்ததாக கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அசைன்மெண்ட் கொடுத்த அந்த பெண் சென்னையில் பிரபல ரவுடி ஒருவரின் மனைவி எனவும், முன்னதாக ரவுடியின் மனைவியை தொடர்பு கொண்டு பேசியவர் சென்னை செம்பாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவி எனவும், இந்த கொலைக்காக 30 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தனிப்படை போலீசார் கூலிப்படைத் தலைவன் முருகேசனை கைது செய்வதற்கு தீவிரமாக தேடி வருகின்றனர். கூலிப்படை தலைவனின் வாக்குமூலத்தின் படி, ஏவி விட்ட இரு பெண்களும் வழக்கில் சேர்க்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.