அரசு அனுமதியுடன் எம்.சாண்ட் எடுத்துவரும் லாரி ஓட்டுனர்களிடம் போன் செய்து, மாமூல் பணத்தை முன்பணமாக கொடுக்கச் சொல்லி மிரட்டுவதாக, செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் காவல் நிலைய தலைமைக் காவலர் மீது புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கில் இருந்து அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச்செல்ல முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ள பாலூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ள பாபு என்பவர் எம்.சாண்ட் ஏற்றி செல்லும் லாரிகளின் ஓட்டுனர்களையும் , உரிமையாளர்களையும் பணம் கேட்டு மிரட்டி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது
லாரிக்கு 1000 ரூபாய் வீதம், மாமூல் பணத்தை கூட முன்பணமாக கொடுக்க வேண்டும் என்றும் சில லாரி உரிமையாளர்களின் பெயரை குறிப்பிட்டு அனைவரிடமும் தகவல் சொல்ல கூறிய ஏட்டு பாபு, பணம் தராவிட்டால் தங்கள் காவல் நிலைய சோதனைச் சாவடியை லாரிகள் தாண்டாது என்று எச்சரித்துள்ளார்
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், பகிரங்கமாக போன் செய்து மாமூல் கேட்டுமிரட்டும் பாலூர் காவல் நிலைய ஏட்டு பாபு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்
இது குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஏட்டு பாபு அந்த ஆடியோவில் இருப்பது தனது குரலே அல்ல என்று மறுத்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ,விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.