கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருப்பவர்கள் எளிமையான முறையில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு மருத்துவ உதவிகளை பெறுவதற்கு வகை செய்யும் பிரத்யேக செயலி சென்னை மாநகராட்சியில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாக கருதுபவர்கள், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட உதவிகளை எளிமையாக பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் பிரத்யேக செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா மானிட்டரிங் ஆப் எனும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு, சென்னை மாநாகராட்சியின் இனையதளப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இணைப்பின் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து ஆண்ட்ராய்டு செல்போன்களில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள், இந்த செயலிக்குள் லாகின் செய்து தங்களை செல்பி எடுத்து பதிவிட்டால் போதும்.
சென்னை மாநகராட்சியின் மருத்துவக் குழுவினர், செல்பி பதிவிட்டவரின் லொகோஷனை டிராக் செய்து அவர்கள் இருக்குமிடத்திற்கு நேரில் செல்வார்கள். தொடர்ந்து செல்பி பதிவிட்டவரை பரிசோதித்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமா அல்லது சாதாரண உடல் நலக் கோளாறா என்பதை ஆய்வு செய்து கண்டறிவார்கள்.
தொற்று இருக்கலாம் என சந்தேகம் எழுந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்துவதா அல்லது, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதா என்பது குறித்தும் முடிவெடுப்பார்கள்.
பொதுமக்களுக்கும் மாநகராட்சிக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்தை எளிமைப்படுத்தும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை மாநாகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த செயலி மூலம் ஆரம்ப கட்டத்திலேயே தொற்றை கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும் என்றார்.