இலங்கையில் அதிபரும், பிரதமரும் பதவி விலக வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. பல ஊர்களில் அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடரும் நிலையில் அரசுக்கு எதிரான அரசியல் நெருக்கடியும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி அந்நாட்டில் தலைநகரில் 20 நாட்களுக்கு மேலாக போராட்டம் நீடித்து வருகிறது.
அதிபரின் அலுவலகத்திற்கு எதிரே உள்ள காலி முகத்திடலில் திரண்ட மக்கள் தற்காலிக தங்குமிடங்களை அமைத்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். பிரதமர் வீடான அலரி மாளிகைக்கு எதிரிலும் கூடாரங்களை அமைத்து தங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இலங்கையின் அரசு மற்றும் தனியார் நிறுவன, தொழிலாளர் நல சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டன. இதனால் நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற் சாலைகளில் பணிகள் பாதிக்கப்பட்டன.
கொழும்பு நகரில் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து காலிமுகத்திடல் வரை தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பல தரப்பினர் ஊர்வலமாக வந்து போராட்டத்தை மேற் கொண்டனர்.
இதே நேரத்தில் கொழும்பு,யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, மலையகம் என நாட்டின் பல்வேறு இடங்களிலும் கடைகளை மூட வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடை வீதிகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டன.