சீனா சோதனை முறையில் டிஜிட்டல் பணத்தைப் புழக்கத்துக்குக் கொண்டு வர உள்ளது.
சீனாவில் ஏற்கெனவே யுவான் என்னும் பணம் புழக்கத்தில் உள்ள நிலையில் அந்நாட்டின் மைய வங்கி இ-ஆர்எம்பி என்னும் டிஜிட்டல் பணப் புழக்கத்துக்கான திட்டத்தைத் தயாரித்துள்ளது. சென்சென், சுசூ, செங்டூ, சியோங்கான் ஆகிய நான்கு நகரங்களில் அடுத்த வாரத்தில் இந்த டிஜிட்டல் பணத்தைச் சோதனை முறையில் புழக்கத்துக்குக் கொண்டுவர உள்ளனர்.
அரசு ஊழியர்கள் சிலருக்கு இந்த டிஜிட்டல் பணத்தையே ஊதியமாக வழங்க உள்ளதாகவும் சீன நாளேடு தெரிவித்துள்ளது. சுசூ நகரில் பொதுப் போக்குவரத்தில் டிஜிட்டல் பணத்தைப் பயன்படுத்த உள்ளதாகவும், ஜியோங்கான் நகரில் உணவகங்களிலும் சில்லறை விற்பனைக் கடைகளிலும் பயன்படுத்த உள்ளதாகவும் சைனா நியூஸ் தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் காகிதத்தால் ஆன பணத்தைப் பயன்படுத்துவது பெருமளவு குறைந்து மின்னணுப் பணப் பரிமாற்றம் அதிகரித்துள்ள நிலையில் டிஜிட்டல் பணம் புழக்கத்துக்கு வர உள்ளது.