அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்து இடஒதுக்கீடு முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க பா.ஜ.க. முயற்சிக்கவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக எண்ணிக்கையிலான அமைச்சர் பதவி வழங்கியது பா.ஜ.க. தான் என்று தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. முகமாக மோடி பிராண்டு உருவாக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, 13 ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும், 10 ஆண்டுகள் பிரதமராகவும் இருந்தவரின் தாய் தமது கடைசி 100 நாட்களை அரசு மருத்துவமனையில் செலவிடுகிறார் என்றால், அதற்கு மேல் தங்களுக்கு என்ன பிராண்டு தேவைப்படுகிறது என்று எதிர்கேள்வி எழுப்பினார்.
தம்மிடம் அதிக எண்ணிக்கையிலான ஆடைகள் இருக்கிறது என்பது மட்டுமே தமது வாழ்நாளில் தம்மீது வைக்கப்பட்ட அதிகபட்ச குற்றச்சாட்டு என்று கூறிய பிரதமர், அதிக துணிகள் வைத்திருப்பவர் தேவையா, அதிக ஊழல் செய்த காங்கிரசார் தேவையா என்ற கேள்வியை மக்கள் மத்தியில் முன்வைத்த போது, தம்மை தயக்கமின்றி மக்கள் தேர்வு செய்ததாகவும் தெரிவித்தார்.