அருணாச்சல் எல்லையில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில், இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ம் தேதி தவாங் செக்டாரில் நடந்த மோதல் குறித்து மக்களவையில் இன்று விளக்கமளித்த ராஜ்நாத் சிங், சீன ராணுவத்தின் அத்துமீறலை, இந்திய ராணுவம் துணிச்சலுடன் எதிர்கொண்டு, தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தார்.
உரிய நேரத்தில் இந்திய ராணுவ கமாண்டர்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டதால், உடனடியாக சீன ராணுவத்தினர் அவர்களது பகுதிக்கு பின்வாங்கியதாகவும் விளக்கமளித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக டிச.11ம் தேதி சீன அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, எல்லையில் அமைதி காக்கும் படி கேட்டுக்கொண்டதாகவும், எந்தவொரு அத்துமீறலையும் சமாளிக்க, இந்திய ராணுவம் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவின் ஒரு அங்குலத்தைக்கூட விட்டுக்கொடுக்க முடியாது என்றும், மக்களவையில் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார்.