நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், முதல்நாளில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர், நாளை துவங்கி அடுத்த மாதம் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாளை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுவதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர்.
மழைக்காலக் கூட்டத் தொடரின்போது 24 மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குடும்பநல நீதிமன்றங்கள் திருத்த மசோதா, தொல்லியல் துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா, தமிழ்நாடு- சட்டீஸ்கரில் பழங்குடியினர் பட்டியலைத் திருத்துவதற்கான மசோதா போன்றவை தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அவையை சுமுகமாக நடத்த சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக அக்னிபத், வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள் நடைபெறுவதால் இந்தக் கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.