பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி வந்த பயங்கரவாதி, லஸ்கர் இ தொய்பா இயக்கம் தனக்குப் பயிற்சியளித்து, ஆயுதங்களைக் கடத்த 20ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளான். திங்களன்று ஜம்மு காஷ்மீரின் ஊரி பிரிவில் பாகிஸ்தானில் இருந்து வந்த 19 வயது இளைஞன் அலி பாபர் பத்ரா, ராணுவத்தினரிடம் சரணடைந்தான்.
அந்த இளைஞன் பேசிய வீடியோவை ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் முசாபராபாத்தில் உள்ள லஸ்கர் இ தொய்பா முகாமில் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் பயிற்சி பெற்றதாகவும், ஆயுதங்களைக் கடத்தி வரத் தனக்கு 20 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளான்.
ஆயுதங்களைக் கொடுத்துவிட்டுத் திரும்பி வரும்போது மேலும் முப்பதாயிரம் ரூபாய் வழங்குவதாகத் தனக்கு உறுதியளிக்கப்பட்டதாகவும் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த இளைஞன் தெரிவித்துள்ளான்.