இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாகப் பல நகரங்களில் வார இறுதி ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அனைவரும் முகக்கவசம் அணிவதுடன், இரண்டு கஜ இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 61 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் சோதிக்கப்படும் மாதிரிகளில் தொற்று கண்டறியப்படும் விகிதம் 12 நாட்களுக்கு முன் 8 விழுக்காடாக இருந்தது. அது 12 நாட்களில் 16 புள்ளி 7 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மும்பை, டெல்லி, லக்னோ, சண்டிகர், போபால் உள்ளிட்ட நகரங்களில் வார இறுதி ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
டெல்லியில் கொரோனா பரவல் மிக மோசமாக உள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்படி பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் சாதோல் மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அழுத்தம் குறைவாக இருந்ததால் 10 பேர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தீவிரச் சிகிச்சைப் பிரிவில் 6 பேர் தான் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர், ஆக்சிஜன் இல்லாததே அதற்குக் காரணம் எனக் கூறப்படுவதை மறுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் கொரோனா நோயாளிகளில் 90 விழுக்காட்டினர் மருத்துவமனைகளில் உள்ளனர். அவர்களில் 50 விழுக்காட்டினருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. பார்மர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாட்டால் நூற்றுக்கு மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன.
வாரணாசி நாடாளுமன்ற உறுப்பினரான பிரதமர் மோடி தனது தொகுதியில் கொரோனா நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் இன்று காணொலியில் கலந்துரையாடினார். அப்போது கொரோனாவை எதிர்த்துப் போராடும் வகையில் வாரணாசியில் போதிய மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதாகத் தெரிவித்தார். அனைவரும் முகக்கவசம் அணிவதுடன் இரண்டு கஜ இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.