மகாராஷ்டிரத்தில் சோதனைக்கு எடுத்த மாதிரிகளின் மரபணு வரிசையை ஆய்வு செய்ததில் இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
13 ஆயிரத்து 614 மாதிரிகளை நாட்டில் உள்ள பத்து ஆய்வகங்களில் மரபணு வரிசை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். அவற்றில் ஆயிரத்து 189 மாதிரிகளில் இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வகை கொரோனா பி ஒன் 617 என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை மகாராஷ்டிரத்தின் விதர்ப்பா பகுதியைச் சேர்ந்தவையாகும்.
மொத்தமாகப் பார்க்கும்போது இவை குறைந்த அளவாக இருந்தாலும், வரும் வாரங்களில் இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் புதிய உருமாறிய கொரோனா மகாராஷ்டிரம், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.