இளம்பெண் தற்கொலைக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட மகாராஷ்டிர அமைச்சர் சஞ்சய் ரத்தோடு பதவி விலகியுள்ளார்.
மகாராஷ்டிரத்தின் பீடு என்னும் ஊரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் பூஜா சவான் டிக்டாக் மூலம் புகழ்பெற்றவர். ஆங்கிலம் பேசும் பயிற்சிக்காகப் புனேயில் தங்கியிருந்த அவர், பிப்ரவரி எட்டாம் நாள் மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கும் அமைச்சர் சஞ்சய் ரத்தோடுக்கும் இடையே நடந்த உரையாடல் என ஒரு குரல் பதிவு சமூக வலைத்தளத்தில் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்துப் பூஜா சவான் தற்கொலைக்கு சஞ்சய் ரத்தோடு காரணம் எனக் குற்றஞ்சாட்டிய பாஜகவினர், அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் அவர் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயிடம் பதவி விலகல் கடிதம் அளித்துள்ளார்.