நன்கு படித்து நல்ல வேலையில் உள்ளதாக கூறி பெண் வீட்டாரை ஏமாற்றி கோடிக்கணக்கில் வரதட்சணை வாங்கிய கணவன், ஒவ்வொரு இரவிலும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தும் கொடுமை பெங்களூரில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் பரத். இவர் பொறியாளர் பணியில் உள்ளதாக கூறியுள்ளார். இவருக்கும் பெண்களர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் ஸ்ரவாணி என்ற பெண்ணிற்கும் கடந்த மாதம் 29ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த திருமணத்தில் பெண் வீட்டில் இருந்து சொகுசு கார், 5 கிலோ நகை, 5 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரம் போன்று சுமார் 3 கோடி மதிப்பில் வரதட்சணை கொடுக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்த முதல் நாள் இரவே பரத் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கேட்ட ஸ்ரவாணியை அடித்து துன்புறுத்தியும் உள்ளார். முதலிரவின் போதே இப்படி நடந்ததால் வாழ்க்கையை வெறுத்த அந்த பெண்ணை குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சமாதானம் செய்துள்ளனர்.
ஆனால் பரத்தோ திருந்தவில்லை. தினமும் இரவு மட்டுமே வீட்டிற்கு வருவது, குடித்து விட்டு ஸ்ரவாணியை அடிப்பது என இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த அந்தப் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பரத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பரத்திற்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது என்றும் அவர் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்றும் ஸ்ரவாணி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.