ஜிஎஸ்டி நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க மாநில அரசுகள் சார்பாக, மத்திய அரசு சுமார் 1 லட்சம் கோடி ரூபாயை கடன் வாங்க உள்ளதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக மாநில அரசுகளுக்கு சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயயை, மத்திய அரசு வழங்க வேண்டியுள்ளது. ஆனால், கொரோனா சூழலால் வருவாய் குறைந்துள்ளதால் தற்போது நிலுவைத் தொகையை வழங்க முடியாது எனவும், மாறாகா நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க மாநில அரசுகள் வெளிசந்தைகளில் இருந்து கடன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியது. இதற்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் ஒப்புதல் தெரிவித்தாலும், மற்ற மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், ஜிஎஸ்டி நிலுவைத் தொகைக்காக ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. தவணை முறையில் வாங்கப்படும் இந்த கடன்தொகை, ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் வெளியீடுகளுக்குப் பதிலாக மாநிலங்களுக்கு அடுத்தடுத்து கடனாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் அரசின் நிதி பற்றாக்குறையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும், மாநில அரசுகளின் நிதி பற்றாக்குறைகளுக்கு நிதியளிப்பதன் ஒரு பகுதியாக இருக்கும் எனவும் பதிவிடப்பட்டுள்ளது. அதேசமயம், இதற்கான வட்டி யாரைச் சேரும் என்பது தொடர்பாக எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை.
இதனிடையே, மத்திய அரசின் கடன் வாங்கும் இந்த முடிவுக்கு, முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.