கேரள மாநிலம் திருச்சூர் அருகே, நண்பருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் ஈடுபட்ட பெண் மருத்துவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். உடன் தங்கி இருந்து 22 லட்சம் ரூபாயை ஏமாற்றியதோடு, பணத்தை திரும்பக் கேட்டதால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
திருச்சூர் அடுத்த கூத்தாட்டுகுளம் பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவர் சோனா. திருமணமாகி விவாகரத்துப் பெற்ற 30 வயதாகும் சோனா, கூட்டா நல்லூரில் கிளினிக் நடத்திவந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று கத்திக்குத்து காயங்களுடன் சோனா உயிருக்கு போராடி வந்தார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சோனா பரிதாபமாக பலியானார். முன்னதாக மருத்துவமனை செல்லும் வழியில் தன்னைக் கத்தியால் குத்தியது தன்னுடன் "லிவிங் டுகெதராக" இருந்த மகேஷ் என்று சோனா அடையாளம் காட்டியதாகக் கூறப்படுகிறது.
விசாரணையில், பல் கிளினிக் நடத்திவந்த மருத்துவர் சோனாவிடம் நிறையப் பணம் இருக்கும் தகவல் அறிந்து மகேஷ் நெருங்கி பழகியுள்ளார். அவருக்கு உதவுவது போல நடித்து நட்பைக் காதலாக்கி உள்ளார். இதில் மயங்கிய சோனா, குரியச்சிரை பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் லிவிங் டுகெதராக வாழ்க்கை நடத்தியுள்ளார். அப்போது சோனாவிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 22 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார் மகேஷ்.
ஒரு கட்டத்தில், தான் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டதால் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர் . சோனா தரப்பில் போலீசில் பணமோசடிப் புகார் அளிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த மகேஷ், சோனாவின் கிளினிக்கிற்கு சென்று தகராறு செய்துள்ளான். வாக்குவாதம் முற்றிய நிலையில் கத்தியால் சரமாரியாகக் குத்தி விட்டு யாருக்கும் தெரியக்கூடாது என தப்பிச்சென்றதும் தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய துரோகக் காதலன் மகேஷை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.